ETV Bharat / state

மாணவி நந்தினிக்கு இல்லம்தேடி சென்று கவிஞர் வைரமுத்து தங்கப்பேனா பரிசு!

author img

By

Published : May 11, 2023, 4:37 PM IST

மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து தங்கப் பேனா பரிசு
மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து தங்கப் பேனா பரிசு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று, வெற்றி பெற்ற மாணவிக்கு தங்கப்பேனாவை வழங்கிய கவிஞர் வைரமுத்து, தற்போது தோல்வியுற்ற மாணவர்கள், மறு தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்படும் என்று கூறினார்.

மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து தங்கப் பேனா பரிசு!

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டிலேயே வரலாற்றுச் சாதனையாக திண்டுக்கல் மாணவி நந்தினி, அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று, தமிழ்நாட்டில் முதல் மாணவியாக தேர்ச்சிப் பெற்றார். மாணவியைப் பாராட்டும் விதமாக கவிஞர் வைரமுத்து மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று, மாணவியைப் பாராட்டி தங்கப் பேனா ஒன்றைப் பரிசாக வழங்கினார்.

மேலும் மாணவியின் தந்தை மற்றும் தாயாருக்கும் வாழ்த்துகள் கூறினார். மேலும் செய்தியாளர்களைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து, ''ஒரு ஏழையின் வீடு, எளிய வீடு, அந்த வீட்டிற்கு இன்று அதிகார மையங்கள் எல்லாம் முற்றுகை இடுகின்றன. திண்டுக்கல் நகரத்தை நோக்கி எல்லா சாலைகளும் நிரம்பி வழிகின்றன. எளிய குடும்பத்துப் பெண் தமிழ்நாடு அளவிலே அறியப்பட்டு உலக அளவில் யார் அந்த நந்தினி? என்ற கேள்வியை எழுப்பும்படி செய்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் காரணம் என்ன தெரியுமா? கல்வியின் வெற்றி. கல்வி என்பது மாடத்தின் உச்சத்தில் அல்ல; மாளிகையின் உச்சத்தில் அல்ல; ஏழையின் குடிசையில் கல்வியின் தீபம் உச்சத்தை நோக்கி எரியும் என்பதற்கு நந்தினி ஓர் உதாரணம். இதை நான் ஒரு அதிசயமாகப் பார்க்கிறேன். நந்தினியை தனிமனிதப் பெண்ணாக பார்க்கவில்லை. கல்வியின் குறியீடாகப் பார்க்கிறேன்.

நந்தினி பெற்றிருக்கும் மதிப்பெண்கள் வரலாற்றில் யாரும் தொடாத இலக்கு. ஆறு பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத செயல். ஆறு தாள்களும் வெவ்வேறு ஆசிரியர்கள் மூலம் பயின்று, ஆறு தாள்களில் நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளார். ஆறு தாள்களும் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு ஆசிரியர்கள் மூலம் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதில் வெற்றி பெற்றுள்ளார்.

கல்வி உலகம், நந்தினியைக் கொண்டாட வேண்டும். பெண் குலத்தைக் கொண்டாடுகிறேன். ஆசிரியர்களை கொண்டாடுகிறேன். மாணவியைக் கொண்டாடுகிறேன். அதே நேரத்தில் மிக மிக முக்கியம் கல்விக்கும், செல்வத்திற்கும் சம்பந்தமில்லை. ஏழ்மை நிலையிலும் கல்வி பெருகிவரும் என்பதற்கு நந்தினி ஒரு எடுத்துக்காட்டு. நந்தினிக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

இன்று நந்தினிக்கு வழங்கிய தங்கப்பேனா என்பது நந்தினிக்கு மட்டும் வழங்கியது அல்ல. வெற்றி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் வழங்கப்பட்ட பேனா. எல்லா பெண்களும் எல்லா மாணவர்களும் வாழ்க்கையில் லட்சியத்தை வைத்துக்கொண்டு லட்சியத்தை நோக்கி செல்ல வேண்டும். நந்தினி தொட்ட சிகரத்தைத் தொட முடியும்.

தேர்வு என்று வந்தவுடன் ஒரு உலகம் வெற்றி பெற்ற உலகம், தேர்ச்சி பெறாத உலகம், தேர்ச்சி பெற்ற உலகத்தையே நாம் கொண்டாடி வருகிறோம். தேர்ச்சி பெறாத உலகத்தை நாம் மறந்து விடுகிறோம். தேர்ச்சி பெறாத உலகத்தையும் கண்காணிக்க வேண்டும். கல்வியில் தோற்றுப்போன மாணவர்களை தத்தெடுத்து, ஆற்றுப்படுத்தி, கல்வியை ஊட்டி அவர்களையும் வெற்றி பட்டியலில் சேர்ப்பதற்கு நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும்.

அப்போது தான் மாணவர் உலகம் சமத்துவப்படும். ஆசிரியர் பெருமக்கள் தோற்றுப் போனவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும். தோற்றுப்போனவர்கள் மீண்டும் தேர்வு எழுதி யார் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்களோ அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

அவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு எப்படி பரிசுகள் வழங்கப்பட்டதோ அதேபோல் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்று அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்'' என்று கூறினார்.

இதையும் படிங்க: பறை இசை கருவிகளை அவமதித்த அரசு பேருந்து நடத்துனர்: கல்லூரி மாணவியை நடு வழியில் இறக்கி விட்ட கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.