ETV Bharat / state

கொடைக்கானல்: இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் வருகை - பாதுகாப்பு தீவிரம்

author img

By

Published : Oct 31, 2022, 5:16 PM IST

இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் வருகை
இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் வருகை

கொடைக்கானல் வட்டக்கானல் பகுதிக்கு இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தொடங்கியதால் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: வெளிநாடுகளில் தற்போது உறைபனி காலம் ஆகும். இந்த உறைபனி காலத்தில் வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளை நோக்கி சுற்றுலா வருவது வழக்கம். குறிப்பாக கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும்.

குறிப்பாக இஸ்ரேலிய நாட்டு யூத இன சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதிக்கு இந்த குளிர்காலங்களில் அதிக அளவில் வந்து செல்வார்கள். இந்த இஸ்ரேலிய யூத இன சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதியில் மூன்று மாதங்கள் தங்கி செல்வார்கள். டிசம்பர் மாதத்தில் 25 ஆம் தேதி முதல் 7 நாட்கள் யூதர்கள் சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள்.

இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் வருகை

இதற்கு இஸ்ரேலில் இருந்து மத தலைவர் ஒருவர் வந்து செல்வார். இந்த சிறப்பு வழிபாட்டிற்குப் பெயர் கபாத் என்பதாகும். இந்நிலையில் கடந்த 2017 ஆகஸ்ட் 11 ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மன்ஜித்மகபூப், சாலிக் முகமது, ரஷீத் அலி, சக் வான், ஜசீம், ராம்சந்த், சஜிர் மங்கள சேரி, மொயின் ஆகிய எட்டு தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்பு கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் தங்கி இருந்துள்ளனர். இவர்கள் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதிக்கு வரும் யூத இன இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை தாக்குவதற்கும் அவர்கள் வழிபாடுகளை சீர்குலைக்கவும் அந்த வழிபாட்டிற்கு வரும் மதத்தலைவர்களை தாக்கவும் திட்டமிடப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோயம்புத்தூரில் கார் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பே தேசிய புலனாய்வு முகமை ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதில் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பினர் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகளை தாக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறி இருந்தது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட சில தினங்களில் தான் கோயம்புத்தூரில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

தேசிய புலனாய்வு முகமையின் அறிவிப்புபடி கொடைக்கானலில் தீவிரமாக அமைப்புகளின் தாக்குதல் ஏதும் நடந்து விடாதபடி போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இஸ்ரேலிய யூதர்களின் வருகை தற்போது தொடங்கி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட அமைப்புகள் இப்பகுதியில் ஊடுருவி தாக்குதல்கள் ஏதேனும் நடத்தி விடக்கூடாது, என்ற முன்னெச்சரிக்கை காரணமாக வட்டக்கானல் பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் யூதர்களின் வருகை அதிக அளவில் இருக்கும். யூதர்களின் மதத் தலைவரும் வர உள்ள இந்த சூழலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி கொடைக்கானல் டிஎஸ்பி சீனிவாசன் கூறியதாவது, "கொடைக்கானலுக்கு குறிப்பாக வட்டக்கானல் பகுதிக்கு இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கி உள்ளனர். தற்போது 20 பேர்கள் வந்துள்ளனர். இதை அடுத்து பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வட்டக்கானல் பகுதியை சேர்ந்த தங்கும் விடுதி உரிமையாளர்கள் வீடுகளை விடுதிகளாக மாற்றி ஹோம் ஸ்டே நடத்துபவர்கள் ஆகியோர் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் வட்டக்கானல் பகுதிகளில் அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் உள்ள விடுதிகளில் தான் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்க வேண்டும். அப்படித் தங்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாஸ்போர்ட், விசா போன்றவற்றை சரி பார்த்து படிவம் சி பூர்த்தி செய்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் விடுதி உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் கூடுதல் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்தப் பகுதியில் போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவம் - சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.