ETV Bharat / state

கோவை கார் வெடிப்பு சம்பவம் - சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

author img

By

Published : Oct 31, 2022, 3:19 PM IST

கோயம்புத்தூர் மாநகரில் கார் வெடிப்புச்சம்பவத்தின் போது காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட மெச்சத்தகுந்த பணியினைப் பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், ' தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.10.2022) தலைமைச்செயலகத்தில், கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்புச்சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப்பாராட்டி அவர்களை சிறப்பிக்கின்ற வகையில் 58 காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கிடும் அடையாளமாக 14 காவல் துறையினருக்குப் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

கோவை மாநகரில் கடந்த 23.10.2022அன்று அதிகாலை உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தினையடுத்து, விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அவ்விடத்தில் தடயங்கள் ஏதும் கலைக்கப்பட்டுவிடாமல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

சம்பவம் நடந்த அன்று அதிகாலை வேளையில் அப்பகுதியில் விழிப்புடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரைக் கண்டவுடன் ஜமேஷா முபினால், மேலும் அவ்வழியே தொடர்ந்து காரைச் செலுத்த இயலவில்லை.

இதனைத்தொடர்ந்து அவ்விடத்திலேயே கார் சிலிண்டர் வெடித்து அவரும் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் காரணமாகவும், காவல் துறையினர் விழிப்புடன் பணியாற்றியதன் காரணமாகவும் பெரும் அசம்பாவிதம் கோவை மாநகரில் தவிர்க்கப்பட்டுள்ளது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் - சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

ஒரு சில நபர்கள் உள்நோக்கத்துடன் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை காவல் துறையினரின் சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக தடுக்கப்பட்டு, தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு நிலைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நிலைமை திறம்பட கையாளப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் தனிப்படைகள் மூலம் புலன் விசாரணை முடுக்கிவிடப்பட்டு 148 தடயங்கள் சேகரிக்கப்பட்டு, வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அச்சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் 24.10.2022 அன்றே கைது செய்யப்பட்டனர். மறுநாள் ஆறாவது நபரும் கைது செய்யப்பட்டார்.

மேலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழும் நடவடிக்கைகள் அடுத்த தினமே (25.10.2022) மேற்கொள்ளப்பட்டன. இரவும் பகலும் ஓய்வின்றி தன்னலமற்ற வகையில் பணியாற்றி வரும் தமிழ்நாடு காவல்துறையினரின் பணி போற்றத்தக்கதாகும்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றி சமூக அமைதியை நிலைநாட்டும் வண்ணம் சேவையாற்றிய காவல் துறையினரின் இப்பணியைப் பாராட்டி, அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், உள்ளிட்ட 58 காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கிடும் அடையாளமாக 14 காவல் துறையினருக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் தலைமைச்செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்'எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கொடநாடு வழக்கை விசாரித்த சிபிசிஐடி டிஜிபி, சிறைத்துறை டிஜிபி ஓய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.