ETV Bharat / state

வாடகை தொகை வழங்கவில்லை: போராட்டம் செய்த பெண்

author img

By

Published : Jun 25, 2021, 9:39 AM IST

போராட்டம் செய்த பெண்
போராட்டம் செய்த பெண்

கரோனா தொற்று முதல் அலையின்போது வீடுகளுக்குச் சென்று காய்கறிகள் விற்பனை செய்ததற்கு உரிய வாடகைத் தொகை வழங்கவில்லை எனக் கோரி பெண் ஒருவர் மாநகராட்சி அலுவலகத்தில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திண்டுக்கல்: முதல் அலை வீசியபோது 2020ஆம் ஆண்டு முழு ஊரடங்கு எந்தவித தளர்வுகளின்றி செயல்படுத்தப்பட்டது. அப்போது திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குள்பட்ட 48 வார்டு பகுதிகளிலும் பொதுமக்களின் வசிப்பிடத்திற்குச் சென்று காய்கறிகள் விற்பனை செய்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்தது.

இதையடுத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது சொந்த வாகனங்களைப் பதிவுசெய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் காய்கறி வியாபாரம் செய்வதற்கு வாகனம் ஓட்டினர்.

போராட்டம் செய்த பெண்

இதற்காக மாநகராட்சி சார்பில் அவர்களுக்கு வாகன வாடகையாக ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் என நிர்ணயம் செய்திருந்தனர். இதற்கான தொகை பலருக்கு வழங்கப்பட்ட நிலையில் 35 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு வாடகையில் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று (ஜூன் 24) திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண், தனது வாகன வாடகைத்தொகை வராததைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து அவர் கூறும்போது, “மாநகராட்சித் தரப்பில் 36 ஆயிரம் ரூபாய் வரை வாடகை பாக்கித் தர வேண்டியது உள்ளது. தற்போதைய கரோனா தொற்று காலத்தில் வாகனம் ஓட்ட முடியாமல் வருமானமின்றி தவிப்பதால் எனக்குச் சேர வேண்டிய தொகையை மாநகராட்சி வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்கினால் எனது குடும்பம் வறுமையிலிருந்து மீண்டு நல்ல உணவு சாப்பிட முடியும். எனவே எனக்குச் சேர வேண்டிய தொகையை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அப்போது அங்கு வந்த மாநகராட்சி ஆணையர் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் விரைவில் பணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அந்தப் பெண் தனது தர்ணா போராட்டத்தைக் கைவிட்டார்.

இதையும் படிங்க: நாகத்துடன் வாழும் நாகனஹள்ளி மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.