திண்டுக்கல்: பழனி அடுத்த சத்திரப்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர், விவசாயி சச்சிதானந்தம் என்பவர் அக்கிராமத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பாக 800 சதுர அடியில் வீடு ஒன்றைக்கட்டியுள்ளார். தற்போது வீட்டின் முன்பு இருந்த சாலை உயர்ந்ததால் பள்ளம் ஏற்பட்டு மழைக்காலங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டதால், அடிக்கடி மழைநீர் வீட்டிற்குள் புகுந்து கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்த நிலையில் வீட்டை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு சச்சிதானந்தம் முற்பட்டபோது, கோவையைச் சார்ந்த பொறியாளர் அறிவுரையின்பேரில் பழைய வீட்டை இடிக்காமல், லிஃப்டிங் முறையில் உயர்த்த முடிவு செய்துள்ளனர். வீட்டினுடைய அடிப்பாகம் முழுவதுமாக பெயர்த்து வைக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்கிகள் உதவியுடன் மேலே உயர்த்தும் பணியில், சில தினங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் ஈடுபட்டனர். பழைய வீட்டை லிஃப்டிங் முறையில் உயர்த்துவதால் புதிய வீடு கட்டுவதற்கு ஏற்படக்கூடிய செலவு, நேரம் குறையும் என்பதால் அப்பொறியாளர் கூறியபடி இந்த முயற்சியில் விவசாயியும் ஈடுபட்டார்.
அதன் விளைவாக, சில தினங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இப்பணிகளின் ஒருபகுதியாக அவரது வீடு இன்று (அக்.12) வரையில் முன்பிருந்த தரை மட்டத்திலிருந்து ஒரு அடி முதல் இரண்டு அடிவரையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய லிஃப்டிங் முறையில் கட்டடத்தை உயர்த்தும் தொழில்நுட்பத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.
இதனால், தேவை இல்லாமல் கட்டடத்தை இடிக்க வேண்டியதில்லை. மேலும், பில்லர்கள் உள்ள கட்டடத்தை மட்டும் தான் உயர்த்த முடியும் என்றில்லாமல், பில்லர் இல்லாத கட்டடத்தைக் கூட இது போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயர்த்தலாம் என்கிறார், பொறியாளர் சந்திரசேகர்.
சத்திரப்பட்டி கிராமத்தில் விவசாயி சச்சிதானந்தம் தனது வீட்டை லிஃப்டிங் முறையில் உயர்த்துவதை கிராம மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். பெருநகரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய இது போன்ற தொழில்நுட்பம் தற்போது கிராமப்புறங்களுக்கும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவில் பெயர்களில் தனிநபர்கள் இணையதளங்களை நடத்த தடை - மதுரை நீதிமன்றம் உத்தரவு