ETV Bharat / city

கோவில் பெயர்களில் தனிநபர்கள் இணையதளங்களை நடத்த தடை - மதுரை நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Oct 11, 2022, 10:34 PM IST

கோவிலின் பெயர்களில் தனிநபர்கள் இணையதளங்களை நடத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில்,"மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில், அறுபதாம் ஆண்டு திருமணம் உள்ளிட்ட திருமண நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும்.

இதற்காகக் கோவிலை அணுகும், பலர் தவறுதலாகத் தனியார் இணையதளத்தினை தொடர்பு கொள்கின்றனர். கோவில் நிர்வாகம் தரப்பில் 2,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், தனியார் இணையதளங்கள் நான்கு லட்சம் ரூபாய் வரை பக்தர்களிடமிருந்து வசூலித்து வருகின்றன.

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, அமிர்தகடேஸ்வரர் கோவிலின் பெயரில் உள்ள தனியார் இணையதளங்களை முடக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு, கோவிலின் பெயரில் தனி நபர்கள் இணையதளத்தை நடத்தக் கூடாது. கோவில் இணை ஆணையர், தனியார் நடத்தும் இணையதளங்களை முடக்கவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்கவும் வேண்டும். அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

அவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். மக்கள் உணர்வை வியாபாரமாக அணுகக் கூடாது. கோவிலின் பெயரில் தனிநபர்கள் இணையதளத்தை நடத்துவது தவறு. ஆகவே, அவை உடனடியாக முடக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு தொடர்பாக, திருவானைக்காவல் இணை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: நண்பனின் நினைவு நாளில் கெத்து காட்ட பொதுமக்களை கத்தியால் வெட்டி வன்முறையில் ஈடுபட்ட ரவுடிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.