நண்பனின் நினைவு நாளில் கெத்து காட்ட பொதுமக்களை கத்தியால் வெட்டி வன்முறையில் ஈடுபட்ட ரவுடிகள்

author img

By

Published : Oct 11, 2022, 9:27 PM IST

நண்பனின் நினைவு நாளில் மீண்டும் கெத்தை நிலை நாட்ட வன்முறையில் ஈடுபட்ட நபர்கள்

பட்டாக்கத்தி, கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஊர்வலம் போல் சென்று கண்ணில் சிக்கியவர்களை வெட்டிவிட்டு சென்ற ரவுடிகள் உட்பட 19 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: ஆலந்தூர் ஆபிரகாம் நகர்ப் பகுதியில் நேற்றிரவு 20க்கும் மேற்பட்ட நபர்கள் பட்டாக்கத்தி, கிரிக்கெட் மட்டை, கற்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டனர். குறிப்பாகக் கண்களில் சிக்கும் நபர்களை வெட்டியும், கடைகள், வாகனங்களை அடித்து உடைத்துவிட்டுக் கூச்சலிட்டுக் கொண்டு சென்றனர். இதனைக் கண்ட பெண்கள் அலறியடித்து வீட்டிற்குள் ஓடிச் சென்றனர்.

இந்த கும்பல் அங்கு நிறுத்தி வைத்திருந்த ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களையும், அந்த வழியாகச் சென்ற நவீன், அபூபக்கர், சபிக் ஆகிய மூன்று பேரையும் சரமாரியாக வெட்டியும் சென்றனர். மேலும், மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலைக் கொளுத்தி கோயிலுக்குள் வீசியும் சென்றனர்.

இதனால் பயந்து போன அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டறைக்கு அளித்த தகவலின் பேரில், மவுண்ட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த மூன்று பேரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அராஜகத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்தாண்டு ரவுடி நாகூர் மீரான் தரப்புக்கும், ரவுடி ராபின் தரப்புக்கும் யார் பெரிய ஆள் எனவும் கஞ்சா விற்பனை தொடர்பாகவும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

அதில், கடந்த அக்டோபர் 14ஆம் தேதி நாகூர் மீரானை, ராபின் தரப்பினர் வெட்டி கொலை செய்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே பகை வலுத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பெயிலில் வெளிவந்த ரவுடி ராபின், ஏரியாவுக்குள் வராமல் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். குறிப்பாக நாகூர் மீரானின் நினைவு நாளுக்குள் ராபினை தீர்த்துக்கட்டி மீண்டும் ஏரியாவுக்குள் கெத்தை நிலை நாட்ட நாகூர் மீரானின் அடியாட்கள் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

நண்பனின் நினைவு நாளில் மீண்டும் கெத்தை நிலை நாட்ட வன்முறையில் ஈடுபட்ட நபர்கள்

கடந்த 10 ஆம் தேதி ராபினின் தங்கை ஷெரின் அவரது காதலன் அரவிந்துடன் மடுவாங்கறையில் உள்ள கடைக்குச் சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்த இரு நபர்கள் ராபின் எங்கே எனக்கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் அரவிந்தை கடத்தி சென்று தாக்கி வேளச்சேரி ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.

இது குறித்து ஷெரின் அண்ணன் ராபினுக்கு அளித்த தகவலின் பேரில், ராபின் தனது கூட்டாளிகளை ஏவி நாகூர் மீரானின் அடியாட்களைத் தாக்க அனுப்பி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து பரங்கிமலை, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி ரகளையில் ஈடுபட்ட துரைப்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த கொலைக் குற்றவாளி அருள்ராஜ் (23), மற்றும் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் சேர்ந்த நவீன்குமார் (23), மணிகண்டன் (23) உள்பட 19 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கொள்ளையடித்து ஊருக்குத் தப்ப முயன்ற போது சில்லறையால் சிக்கிய திருடன்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.