தருமபுரி மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் ஒகேனக்கல். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து அதிகளவில் ஏ சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்குச் சுற்றுலா வருவது வழக்கம்.
ஒகேனக்கல் மெயின் அருவிக்குச் செல்லும் வழியில், உள்ள பிரதான வழி தற்போது இரும்பு கதவுகளால் பூட்டப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த வழியைப் பயன்படுத்த முடியாமல் மாற்று வழியில் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்த பிரதான வழி அரசியல் தலைவர்கள், அரசு அலுவலர்கள், அவர்களது குடும்பத்தார், போன்ற விவிஐபிகள் வந்தால் மட்டுமே திறந்துவிடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சுற்றித் செல்லக்கூடிய பகுதிகளில் அதிகளவு மீன்சமைக்கும் கடைகள் இருப்பதால் அங்கு சமைக்கப்படும் எண்ணெய், உணவுகள் அவ்வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் மேல் விழுகிறது. ஆனாலும் சுற்றுலாப் பயணிகள் வேறு வழியின்றி இந்த வழியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள பிரதான வழியின் கதவு பூட்டப்பட்டு அதன் சாவி ஆளும் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து கவனம் செலுத்தி விஐபி வழியை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விட வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசு நிலத்தை தரக்கோரி மக்கள் போராட்டம்...