தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மொரப்பூா்- தர்மபுரி ரயில் திட்டத்தை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 2019ஆம் ஆண்டு 358 கோடி ரூபாய் மதிப்பில் ரயில் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது. ரயில் திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டப்பட்ட பணியோடு கிடப்பில் உள்ளது. தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் மொரப்பூர் - தர்மபுரி ரயில் பாதை திட்டத்தை உடனடியாக தொடங்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து மனு அளித்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்பணியில் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தால், மத்திய ரயில்வே வாரிய தலைவர் சுனட்ஷர்மாவை சந்தித்து கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்தார். அதன் தொடர்ச்சியாக ரயில்வே தென்மண்டல பொது மேலாளரை சந்தித்து மொரப்பூர் - தர்மபுரி ரயில் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த கோரிக்கை மனுவில், சென்னை - திருவனந்தபுரம் இடையே செல்லும் அதிவிரைவு ரயில் கோயம்புத்தூர் - திருப்பதி செல்லும் விரைவு ரயில் என இரண்டு ரயில்களும் மொரப்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தவேண்டும். கோவை விரைவு ரயில் பொம்மிடி ரயில் நிலையத்தில் நிறுத்தவும்.
கோவிலூர் கிராமத்திற்கு செல்லும் மேட்டூர் - சேலம் ரயில் தடம் அருகில் உள்ள பழுதடைந்த தரை பாலத்தை சரி செய்ய வேண்டும். மேட்டூர் சென்னை இடையே பழைய ரயில் பாதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பொம்மிடி ரயில் நிலையத்தில் லக்கேஜ் முன்பதிவு தொடங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கை அடங்கிய கடிதத்தை தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தென்மேற்கு, தென்மண்டல ரயில்வே பொதுமேலாளரிடம் வழங்கினார்.
இதையும் படிங்க...பாப்பம்மாள் போராட்டங்களில் முன் நிற்பவர்: மு.க. ஸ்டாலின் வாழ்த்து