ETV Bharat / state

சாலை விபத்தில் மூளைச்சாவு... பிறருக்கு பயன்படும் வகையில் உடல் உறுப்புகள் தானம்!

author img

By

Published : Jun 20, 2023, 8:12 AM IST

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

தருமபுரி அருகே சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகள் உறவினர்களின் அனுமதியோடு தானம் செய்ய பிற மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

தருமபுரி: நல்லம்பள்ளி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர், தீப்பாஞ்சி (வயது 40). ஐடிஐ படித்து முடித்து விட்டு பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லம்பள்ளி கிராமத்தின் ஒரு தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தீப்பாஞ்சி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதன் காரணமாக தீப்பாஞ்சியின் சகோதரர் சரவணனின் விருப்பத்தின் பேரில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மயக்கவியல் துறை தலைமை மருத்துவர் முருகேசன் தலைமையில் மருத்துவக்குழு அவரது இதயம், கணையம், கல்லீரல், கிட்னி ஆகிய நான்கு உள் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர்.

பின்னர், இந்த உடல் உறுப்புகள் காலத் தாமதமின்றி சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. விபத்தில் மரணம் அடைந்த தீபாஞ்சியின் உடல் உறுப்புகள் பிறருக்கு பயன் தரும் வகையில் தானம் செய்யப்பட்ட நிகழ்வு தீப்பாஞ்சியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மயக்கவியல் துறை தலைமை மருத்துவர் முருகேசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், “கடந்த 15 ஆம் தேதி நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லுரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளித்தும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மூளை செயல் இழந்ததால் அவரது உறுப்புகளை, மருந்துகள் மற்றும் செயற்கை சுவாசம் மூலம் இயங்க வைத்தோம். அவரது உறவினர்களிடம் உடல் உறுப்புகள் தானம் செய்தால் அதன் மூலமாக பலருக்கு மறுவாழ்வு தரமுடியும் என்று கூறினோம்.

அதை அவர்களும் ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு இறந்தவரின் இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை எடுத்து, அதில் ஒரு சிறுநீரகம் சேலம் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் ஈரோடு மருத்துவமனைக்கும், கல்லீரல் ஈரோடு அபிராமி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

இறந்தவரின் உறவினர் சரவணன், “எனது தம்பி தீப்பாஞ்சி 5 நாட்களுக்கு முன் விபத்தில் பலத்த காயம் அடைந்து மூளைச் சாவு ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். அதனால் மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தோம்” என்றுக் கூறினார்.

இதையும் படிங்க: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய தருமபுரி எம்.பி.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.