தர்மபுரி: மக்கள் ஆடி 18ஆவது நாளை ஆடிப்பெருக்கு விழாவாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீராடி கொண்டாடுவது நெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஆடிப்பெருக்கு விழாவை ஒகேனக்கலில் விழாவாக ஆண்டுதோறும் நடத்தி வந்தது. கடந்த இரு ஆண்டுகளாக கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு விழா ஒகேனக்கலில் நடைபெறவில்லை.
நாளை ஆடி 18ஆம் தினத்தை முன்னிட்டு இன்று ஒகேனக்கலில் சுற்றுலாத்துறை மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. விழாவை தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி வைத்தார்.
பின் அரசின் பல்துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விளக்க அரங்குகளைப்பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் 4,622 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி, தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாவட்ட ஆட்சியர் சாந்தி உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆடிப்பெருக்கு.. பாப்பட்டான் குழல் நோம்பி!