ஆடிப்பெருக்கு.. பாப்பட்டான் குழல் நோம்பி!

author img

By

Published : Aug 2, 2022, 9:49 PM IST

ஆடிப்பெருக்கின் ஆனைமலை ஸ்பெஷல் பாப்பட்டான் குழல் நோம்பி

ஆடிப்பெருக்கு அன்று பாப்பட்டான் குழல் கொண்டு சிறுவர்கள் விளையாடி மகிழ்வது ஆனைமலை வட்டார பாரம்பரியம் ஆகும். அழிந்து வரும் பாப்பட்டான் குழல் பாரம்பரியத்தை பற்றி காணலாம்.

கோவை: பாப்பட்டாங்காய் என்னும் பெயருடைய சிறு காய் ஆடிப்பெருக்கு காலத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக அளவில் காணப்படும். அச்சிறுகாய் நுழையும் வகையில் அளவில் மரத்துண்டில் துளையிடுவர். அத்துளையுடன் பொருந்தும் வகையில் கைப்பிடியுடன் கூடியதாக சிறு குச்சியினைத் தயார் செய்வர். துளையிட்ட மரத்தண்டில் கூம்பு வடிவில் அட்டையை இணைப்பர். வண்ணத்தாள்களால் அலங்கரிப்பர். இப்பொழுது பாப்பட்டான் குழல் தயார்.

ஒரு பாப்பட்டாங்காயை எடுத்து, மரத்தண்டுத் துளையில் பொருத்தி கைப்பிடிக் குச்சியால் வேகமாக அழுத்தினால் அச்சிறுகாய், உடைந்து சிதறும். அப்போது சிறு ஓசை கேட்கும்; கூம்பு வடிவம் அவ்வொலியைப் பெரிது படுத்தும். அது பொட்டுப்பட்டாசு வெடிப்பதைப் போன்று கேட்கும். சிறுவர், சிறுமியர் மிகவும் விருப்பத்துடன் விளையாடுவார். ஆனைமலை வட்டாரத்தில் பாப்பட்டாங்குழல் இல்லாமல் சிறுவர்களுக்கு ஆடிப்பெருக்கு இல்லை.

பாப்பட்டான் குழல் நோம்பி
பாப்பட்டான் குழல் நோம்பி

இந்த பாப்பட்டான் குழல் நாட்டிலேயே ஆனைமலை பகுதியில் மட்டும் தான் விற்பனையாகிக்கொண்டிருக்கிறது என்பது இதன் சிறப்பம்சமாகும். ஆனைமலை வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவர்களானாலும் வாழ்ந்தவர்களானாலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஆடிப்பெருக்கு அன்று இந்த பாப்பட்டான் குழல் நினைவு நெஞ்சில் எழாமல் இராது. மேலும் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் எருமை பாறை, கோழிகமுத்தி, கூமாட்டி பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களின் பிரதான தொழிலாக பாப்பட்டான் குழல் தயாரிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடிப்பெருக்கின் ஆனைமலை ஸ்பெஷல் பாப்பட்டான் குழல் நோம்பி

இதையும் படிங்க: ஆனைமலை புலிகள் காப்பகம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.