கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்!

author img

By

Published : Aug 5, 2022, 10:53 PM IST

Etv Bharat முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் சிதம்பரம் அருகே 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர்: காவிரி நீர் பிடிப்புப்பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஆர்ப்பரித்து வருவதால், மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியது. மேலும் அதிக அளவு நீர்வரத்து தொடர்ந்து வருவதால் மேட்டூரில் இருந்து உபரி நீர் அப்படியே திருச்சி கல்லணைக்கு அனுப்பப்படுகிறது.

அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கீழணைக்கு அனுப்பப்படுகிறது; கீழணை அதன் முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் வரும் உபரிநீர் விநாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி வெளியேற்றப்படுவதால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுக்கூடலூர், வையூர், கண்டியமேடு, வேலக்குடி, பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், அக்கரை ஜெயங்கொண்டபட்டணம், கீழகுண்டலப்பாடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் திட்டு கிராமங்களான கீழ கொண்டலப்பாடி, அக்கரை ஜெயங்கொண்ட பட்டணம், திட்டுக்காட்டூர் கிராமங்களில் உள்ள சுமார் 3000க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி படகுமூலம் பொதுமக்களை புயல் வெள்ளபாதுகாப்பு மையத்திற்கு அழைத்து வரும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டால் பொதுமக்களைக்காப்பாற்றும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், மருத்துவக் குழுவினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் தயார் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வேண்டிய உணவு, குடிநீர் அனைத்து வசதிகளும் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதிக அளவு நீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்களைத் தற்போது தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்குச்சொந்தமான படகுகள் மூலம் புயல் வெள்ள பாதுகாப்பு மையத்திற்கு தங்க வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்!

வீடுகளில் இருந்த கால்நடைகளைப்பாதுகாக்கும் வகையில் கால்நடைகளின் உரிமையாளர்கள் வீட்டின் மாடி மீது அவற்றை கட்டி வைத்திருக்கின்றனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் பெரும் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் - ஹூப்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.