ETV Bharat / state

கீழணை, வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

author img

By

Published : Aug 31, 2020, 5:29 PM IST

கடலூர்: கீழணை, வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அரசு தலைமை கொரடா தாமரை எஸ். ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

கீழணை, வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
கீழணை, வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

கீழணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் ஆகியோர் இன்று (ஆக.31) திறந்து வைத்தனர். இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் த. ரத்னா ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்து தண்ணீரை தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையில் வந்தடைந்து. கல்லணையிலிருந்து ஜூன் 16ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் ஜூன் 21ஆம் தேதி கீழணை வந்தடைந்தது. கீழணை வந்தடைந்த தண்ணீரை அணையில் தேக்கப்பட்டு கீழணை, வீராணம் ஏரி ஆகியவற்றின் பாசன விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டத்திற்கு சம்பா சாகுபடிக்காக விகிதாச்சாரம் அடிப்படையில் இன்று வடவாறு வாய்க்கால் (600 கன அடி விநாடிக்கு), வடக்கு ராஜன் வாய்க்கால் (400 கன அடி விநாடிக்கு), தெற்கு ராஜன் வாய்க்கால் (400 கன விநாடிக்கு) பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கீழணை, வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

இதனால் கீழணையிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு நேரடி பாசனத்திற்காக கொள்ளிடமான வடக்கு ராஜன், கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், கஞ்சன் கொல்லை என மொத்தம் 47,997 ஏக்கர் பாசனமும், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்கால், குமுக்கிமன்னியார், விநாயகன் தெரு வாய்க்கால் வாயிலாக மொத்தம் 39,050 ஏக்கர் பாசனமும். வீராணம் ஏரியில் இருந்து 44,856 ஏக்கர் பாசனமும் என மொத்தம் 1,31,903 ஏக்கள் விளை நிலங்களுக்கு பாசன வசதிகள் அளிக்கப்படும்.

அதேபோல் நேரடி பாசனத்திற்காக ராதா வாய்க்கால் மதகு (10 கன அடி / விநாடிக்கு), வீராணம் புதிய மதகு (74 கன அடி/ விநாடிக்கு) வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வீராணம் ஏரியில் உள்ள அனைத்து 34 மதகுகளும் திறக்கப்பட்டு அனைத்து மதகுகளிலும் சேர்த்து மொத்தம் 405 கன அடி/வினாடிக்கு தண்ணீர் வழங்கப்படும். இதன் மூலம் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், புவனகிரி தாலுக்காக்களில் உள்ள 102 கிராமங்களில் மொத்தம் 44,856 ஏக்கர் பாசன பரப்புகள் பயனடையும். மேலும் அவ்வப்போது பாசனத்தேவைக்கேற்ப தண்ணீர் அளவு மாற்ற அமைக்கப்பட்டு அனைத்து பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படுவதுடன் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அவ்வப்போது பாசனத்தேவைக்கேற்ப தண்ணீர் அளவு மாற்றியமைக்கப்பட்டு வாய்க்கால்களில் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும். இதன் தொடர்ச்சியாக அனைத்து பாசன வாய்க்கால்களுக்கும் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும். எனவே பாசன விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்றார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ரவி மனோகர், செயற்பொறியாளர் சாம்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் அருணகிரி, சக்திவேல், ரமேஷ், முத்துகுமார், ஞானசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: முதல் போக சாகுபடிக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.