உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, அவசியமின்றி சாலையில் திரிவோரை விரட்டியடிக்கும் காவல் துறையினர், மீண்டும் கண்ணில் பட்டால் வழக்குப் பதிவோம் எனவும் எச்சரிக்கின்றனர்.
மேலும், தற்போது வரை 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 50 வாகனங்களைப் பறிமுதல் செய்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.