ETV Bharat / state

மதுபோதையில் வீட்டுக்கு வந்த காதலன்.. காதலி தற்கொலை - கோவையில் நடந்தது என்ன?

author img

By

Published : Jun 11, 2023, 6:35 AM IST

Coimbatore
கோயம்புத்தூர்

கோவையில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

கோயம்புத்தூர்: சுந்தராபுரம் காந்திநகரைச் சேர்ந்தவர் பிரசாந்த் (21). இவரும் செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும் பாறையைச் சேர்ந்த தன்யா (18) என்ற இளம்பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து இரு வீட்டாரும், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த 5ஆம் தேதி பிரசாந்த், தன்யாவின் பிறந்தநாளை கொண்டாடவும், அவருக்கு வாழ்த்து சொல்லவும் நள்ளிரவு தனது நண்பர்களுடன் மதுபோதையில் தன்யாவின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது தன்யாவின் பெற்றோர், பிரசாந்த்தை மதுபோதையில் இருந்ததால் கடுமையாக கண்டித்துள்ளனர். அப்போது, அங்கிருந்த தன்யாவின் தாய்மாமாவான விக்னேஷுக்கும், பிரசாந்த்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றவே, ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரசாந்தை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்து பிரசாந்த்தை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே பிரசாந்த் இறந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு சென்ற பின் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த செட்டிபாளையம் காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து விக்னேஷை கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த தன்யா திடீரென தற்கொலைக்கு முயற்சி செய்து மயங்கி கிடந்துள்ளார்.

Suicide
தற்கொலையை கைவிடுக

இதனை பார்த்த பெற்றோர் அவரை எழுப்ப முயற்சி செய்துள்ளனர். தொடர்ந்து, தன்யாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் தன்யாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு பின்னர், தன்யாவை அவரது பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இருப்பினும், தனியா சோர்வாக இருந்ததால் தன்யாவின் பாட்டி உடன் இருந்துள்ளார். அதன் பிறகு நேற்றைய முன்தினம் தன்யாவின் தாய், தந்தை இருவரும் வேலை விஷயமாக வெளியில் சென்றுள்ளனர். அப்போது தன்யா தனது பாட்டியிடம், தனக்கு வயிறு வலிப்பதாகவும், அதற்கு அருகே உள்ள மருந்து கடைக்குச் சென்று மருந்து வாங்கி வருமாறு வரை வெளியில் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில், தன்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர், தன்யாவின் பாட்டி வீட்டிற்கு வந்து பார்த்தபோது தன்யா உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, தன்யாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த செட்டிப்பாளையம் காவல் துறையினர் தன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கல்லூரி தாளாளர் தலைமறைவு.. தென்காசியில் கொடூரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.