ETV Bharat / state

"கோவையில் கனிமவளங்கள் கொள்ளை" - தமிழக அரசு தலையிட சமூக ஆர்வலர் முகிலன் கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 2:25 PM IST

கோவையில் கனிமவளக் கொள்ளை: தமிழ்நாடு அரசுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன்

கோவையில் கட்டுப்பாடியின்றி கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக சமூக ஆர்வலரும், விவசாயியுமான முகிலன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அரசு உடனடியாக தலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளர்.

சமூக ஆர்வலர் முகிலன் செய்தியாளர்கள் சந்திப்பு

கோயம்புத்தூர்: கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கனிம வளங்கள் கடத்தல் குறித்து சட்ட ஆலோசனைகள் மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் பங்கேற்றார். அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் அதிக அளவு கல் குவாரிகள் உள்ளது. இங்குள்ள கல்குவாரிகளில் பெரும்பாலனவை அரசு நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறி சட்ட விரோதமாக இயங்கி வருகிறது.

300 மீட்டர் தொலைவிலே வீடுகளும், மனைகளும் உள்ளன. நீரோடை மற்றும் மின்கம்பங்கள் விதிமுறைக்கு மாறாக 50 மீட்டர் இடைவெளி இல்லாமல் உள்ளது. மேலும், ஆழ்துளை கிணறுகள் மற்றும் மேல்நிலை தொட்டிகள் 500 மீட்டர் இடைவெளி இல்லாமல் உள்ளது. கல்குவாரியில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுத்து செல்வதால் கிராமப்புற ரோடுகள் அதிக அளவு சேதமடைந்து விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

கல்குவாரிகள் இயங்குவதால் நீர்நிலைகள் குறைந்து வருகிறது. கால்நடை வளர்ப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். சட்ட விரோதமாக கல்குவாரி செயல்படும் இடங்களில் அதிக வெப்பம் உள்ளதால் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், கல்குவாரி உரிமையாளர் சங்க செயலாளர் மாதந்தோறும் 100 கோடி ரூபாய் கனிம வளத்துறைக்கு வழங்குகிறார். குவாரிகள் ஒவ்வொன்றும் தலா மூன்று லட்சம் ரூபாய் வரை சட்டவிரோதமாக கொடுக்கின்றனர். மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் கல்குவாரி செயல்பாட்டில் இணைந்து, தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கப்பட வேண்டும்.

சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரியை எதிர்த்து போராடுகின்ற மக்கள் மீது கோட்டாட்சியர் 107 என்ற பிரிவை கூறி எச்சரிக்கிறார். சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் கல்குவாரி உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக மாவட்ட கலெக்டர் மற்றும் சப் கலெக்டர் ஆகியோர் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கதக்கதாகும். எனவே, சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு போராளிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், தற்போது ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க அரசு தேர்தலின் போது பொதுமக்களின் பிரச்சனைகளான சட்ட விரோத கல்குவாரி, எட்டு வழி சாலை மற்றும் ஸ்டெர்லைட் ஆலை போன்றவைகளை கூறி வெற்றி பெற்றது. தற்போது வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள், தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர், கனிமவளத்துறையை தனது துறையாக நினைத்து விவசாயிகளின் வாழ்வதாரத்தை காக்க வேண்டும். இயற்கையை பாதுகாக்கும் பணியை போர்கால அடிப்படையில் அரசு செய்ய வேண்டும்” என்று கூறினார்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் நாகேந்திரன், ராஜன், பட்டீஸ்வரன், சிவபிரகாஷ், முருகானந்தம் மற்றும் சுற்றியுள்ள விவசாயிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: பழனியில் பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம்..! கருப்பணசுவாமி கோயில் திருவிழா கோலகலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.