பழனியில் பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம்..! கருப்பணசுவாமி கோயில் திருவிழா கோலகலம்!
Published : Sep 10, 2023, 10:38 AM IST
திண்டுக்கல்: பழனி அருகே கருப்பணசுவாமி திருவிழாவை முன்னிட்டு வள்ளி கும்மி ஆட்டம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு கும்மிப் பாட்டுக்கு நடனமாடினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மயிலாடும்பாறை பகுதியில் பழமையான அருள்மிகு கருப்பணசாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கருப்பணசாமி கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு 40 கிடா வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரவு பாரம்பரிய வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் கலந்து கொண்டு ஆடி மகிழ்ந்தனர். பின்னர் முளைப்பாரி ஊர்வலம், மாவிளக்கு போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
இதில் பல்வேறு பகுதிளை சேர்ந்த பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தக் கூட மற்றும் முளைப்பாரியில் கலந்து கொண்ட ஏறத்தாழ 200 பெண்களுக்கு திருக்கோயில் விழா குழுவினர் சார்பில் சேலைகள் வழங்கப்பட்டன.