ETV Bharat / state

'கோவையில் கார் வெடிப்புச்சம்பவம்... காவல்துறையில் சில கவனக்குறைவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன'

author img

By

Published : Oct 31, 2022, 7:27 PM IST

அண்ணாமலை அளித்த பேட்டி
அண்ணாமலை அளித்த பேட்டி

கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறையில் சில கவனக்குறைவுகள் ஏற்பட்டுள்ளது எனவும்; உளவுப்பிரிவு சிலரை கண்காணிக்கும் பணியைத் தவறவிட்டு விட்டதாகவும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் கடந்த 23ஆம் தேதி டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் கார் வெடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து NIA அலுவலர்கள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் பாஜக மகளிர் அணியினருடன் இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், 'கோவையில் பெரும் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோட்டை ஈஸ்வரன், முருகனுக்கு நன்றிக்கடன் செலுத்திவிட்டு கோயிலுக்கு மத நல்லிணக்கம், மத ஒற்றுமை, கோவை மக்களின் வாழ்க்கைப்பயணம் நன்றாக இருக்க வேண்டும் என்று கந்த சஷ்டி கவசத்தை ஒன்றாகப்பாடி உள்ளோம். கடந்த 23ஆம் தேதி அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதன் பின்பே எட்டு நாட்களாக அரசியல் கட்சிகள் பத்திரிகையாளர்கள் பேசி வருகிறோம். இதைத் தாண்டி கோவை செல்ல வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன். 1998 குண்டுவெடிப்பிற்குப்பிறகு, கோவையின் வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அந்த குண்டுவெடிப்பிற்குப்பிறகு கோவையின் வளர்ச்சி பின்னோக்கி சென்றுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் கந்த சஷ்டி கவசம் பாடினார்
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் கந்த சஷ்டி கவசம் பாடினார்

கடந்த பத்து ஆண்டுகளாக, கோவையில் உள்ள மக்களும் தொழிலதிபர்களும் கோவையை முன்னெடுத்துச்செல்கின்றனர். இந்த நேரத்தில் இந்த தற்கொலைத்தாக்குதல் நடந்திருந்தால் கோவை மாவட்டம் இன்னும் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றிருக்கும். அதனைத்தடுத்து நிறுத்திய முதல் காக்கும் கடவுள்களாக இப்பொழுது இருக்கக்கூடிய காவல் துறையினர், துணைத்தாக்குதல் எதுவும் நடைபெறாத வண்ணம் உயிரை பணயம் வைத்துப்பணி செய்துள்ளனர்.

எனவே, கோவை மாநகர காவல்துறையினருக்கு நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன். சதிகாரர்கள் மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும்கூட, கோவை மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். கடந்த 23ஆம் தேதி நடந்த சம்பவத்திற்குப்பிறகு இங்குள்ள இஸ்லாமிய பெருமக்கள், மதகுருமார்கள் கூட நல்ல கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

அண்ணாமலை அளித்த பேட்டி

கோவையில் உள்ள மக்கள் வன்முறையைக் கையில் எடுக்கக்கூடாது. வன்முறையைக் கையில் எடுப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடாது என்பது எனது வேண்டுகோள். மாநில அரசிடம் நாங்கள் வைத்துள்ள கேள்விகள் எல்லாம் மாநில அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே; தவிர, மாநில அரசை குற்றம் குறை காண்பிக்கவோ மாநில அரசுக்கு தொந்தரவு அளிக்கவேண்டும் என்பதற்காகவோ அல்ல” என்றார்.

மேலும், 'சம்பவத்தின்போது கைப்பற்றப்பட்ட சில பொருட்கள் என சிலவற்றை (கோலிகுண்டு, ஆணி) காண்பித்து, இன்னும் காவல்துறையினர் இதனை சிலிண்டர் வெடித்தது என்று கூறுவதற்கு என்ன காரணம். அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்' என கேள்வி எழுப்பினார்.

'ஐஎஸ்ஐஎஸ் என்பது தவறான ஐடியாலஜி என இஸ்லாமிய மதத்தில் உள்ள குருமார்களே சொல்கிறார்கள். எனவே, அவர்களை விடக்கூடாது அவர்களின் மீது கோபமாகத் தான் இருக்க வேண்டும். கூடிய விரைவில் இஸ்லாமிய குருமார்களையும் சந்திக்க உள்ளேன். காவல்துறையில் சில கவனக்குறைவுகள் ஏற்பட்டுள்ளது. உளவுப்பிரிவு சிலரை கண்காணிக்கும் பணியைத் தவறவிட்டுவிட்டார்கள். காவல்துறையில் பணி சுமை உள்ளது. ஆள்பற்றாக்குறை இருக்கிறது.

மத்திய அரசு ஏற்கெனவே ஒற்றை ஓநாய் தாக்குதல் நடத்தக்கூடும் என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. காவல் துறை எப்போதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு போய்விடக்கூடாது. அதனை பாஜக கட்சி ஒரு வாய்ப்பாக வைத்து பேசவும் மாட்டோம். மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் எனக்கூற மாட்டோம்.

இச்சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்யவோ அல்லது பலனடையவோ பாஜக விரும்பாது. NIA இதனை பயங்கரவாதத் தாக்குதல் என தற்போது கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தமிழ்நாடு அரசு ஏன் பயங்கரவாதத் தாக்குதல் என குறிப்பிடவில்லை. பந்த் அறிவிப்பை பொறுத்தவரை கட்சியின் அலுவலகத்தில் இருந்து கூறினால் தலைவர் பொறுப்பாக முடியும். ஆனால், இது மாவட்ட நிர்வாகிகள், சில அமைப்புகள் முடிவெடுத்தது.

2022இல் 14 போராட்டங்களை நாங்கள் நடத்தியுள்ளோம். அதே சமயம் எங்களுடைய அனுமதியின்றியும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. எங்களைப்பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு ஒரு பலமான அதிமுக தேவை. அதை முடிவெடுப்பவர்கள் தொண்டர்களே. எனவே அதிமுக கட்சி குறித்து கருத்து சொல்ல எனக்கு உரிமை இல்லை' எனக்கூறினார்.

இதையும் படிங்க: 'மன்னிப்பு கேட்பது என் ரத்தத்திலேயே கிடையாது' - அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் வாக்குவாதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.