ETV Bharat / state

"சந்திரயான் தென்துருவத்தின் அருகில் இறக்கப்பட்டுள்ளது.. தென்துருவத்தில் இறக்கப்படவில்லை.. இதில் மறைக்க எதுவுமில்லை" - விஞ்ஞானி வீரமுத்துவேல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 4:26 PM IST

விஞ்ஞானி வீரமுத்துவேல் சந்திரயான் 3 குறித்து பேச்சு
விஞ்ஞானி வீரமுத்துவேல் சந்திரயான் 3 குறித்து பேச்சு

ISRO Scientist Veeramuthuvel: எந்த பள்ளியில் இருந்து படிக்கின்றோம் என்பது முக்கியமல்ல என்று மாணவர்கள் நிறைய ஆராய்ச்சி திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் ஏனென்றால் நானே அரசு பள்ளியில் இருந்து வந்தவன் தான் என சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்தார்.

ISRO Scientist Veeramuthuvel Press meet about Chandrayaan 3 Landing issue

கோயம்புத்தூர்: நிலவின் தென் துருவில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கி, அங்கு சென்ற உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவிற்கு தேடித் தந்தவர் தான், சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல். இவர், கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கல்வி குழும மாணவர்களுடன் சந்திரயான் 3 திட்டம் குறித்து கலந்துரையாடினார்.

மேலும், மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வீரமுத்துவேல், "சந்திரயான் 3 மிஷன் முடிந்து விட்டது. சந்திரயான் லேண்ட் ஆன போது நிலவில் புழுதி ஒரு அச்சுறுத்தலாக இல்லை. இதுவரை யாரும் போகாத இடத்தில் சந்திரயான் தரையிறக்கப்பட்டது.

நிலவிற்கு மனிதர்களை அனுப்புவது என்பது நீண்டகால திட்டம். அதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. நிலவிற்கு மனிதர்கள் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சந்திரயான் 3 தரையிறக்கம் என்பது மிகவும் மகிழ்வான ஒன்று. பிரதமர் நேரடியாக கலந்துரையாடியது மகிழ்ச்சி அளிக்கின்றது.

இஸ்ரோவில் பல திட்டங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கின்றன. மாணவர்களுக்கு படிப்பது மட்டுமே முக்கியம். கல்லூரியில் இருந்து வெளியே வரும் போது நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சந்திரயான் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல்.

விண்வெளி ஆராய்ச்சியில் பிறநாடுகளுக்கு இணையாக நம்முடைய செயல்பாடு இருக்கின்றது. சந்திரயான் தென்துருவத்தின் அருகில் தான் இறக்கப்பட்டு உள்ளது. தென்துருவத்தில் இறக்கப்படவில்லை. இதில் மறைக்க எதுவுமில்லை. மாணவர்கள் மத்தியில் விண்வெளி குறித்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் எனக்கும் இஸ்ரோவில் பணியாற்றுபவர்களுக்கும் நிறைய கடிதம் எழுதி இருக்கின்றனர். மாணவர்கள் சந்திரயான் குறித்து ஆர்வமாகவும், துல்லியமாகவும் கடிதம் எழுதி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. சந்திரயான் 3 மாணவர்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது.

சந்திரயான் குறித்த அவர்களின் ஆர்வத்தை என்னால் பார்க்க முடிந்தது. நாம் எந்த பள்ளியில் இருந்து படிக்கின்றோம் என்பது முக்கியமல்ல. மாணவர்கள் நிறைய ஆராய்ச்சி திட்டங்களை வகுக்க வேண்டும். ஏனென்றால் நானே அரசு பள்ளியில் இருந்து வந்தவன்தான்" என்று விஞ்ஞானி வீரமுத்துவேல் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சந்திர கிரகணம் என்றால் என்ன? கோயில்கள் நடை அடைப்புக்கு காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.