ETV Bharat / state

DIG Vijayakumar Suicide: முகாம் அலுவலகத்தில் என்ன நடந்தது? பாதுகாவலர் அளித்த புகார் என்ன?

author img

By

Published : Jul 8, 2023, 9:27 AM IST

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது பாதுகாவலர் அளித்த தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

DIG Vijayakumar Suicide
DIG Vijayakumar Suicide

கோயம்புத்தூர்: கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்று (ஜூலை 7) அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் விசாரிக்குமாறு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

இதனை அடுத்து விசாரணைக்காக கோவை வந்த ஏடிஜிபி அருண், டிஐஜி விஜயகுமாரின் தற்கொலைக்கு ஓசிடி எனப்படும் மன அழுத்தம்தான் கரணம் எனவும், அவரது தனிப்பாதுகாவலரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து உள்ளதாக கூறினார். மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், டிஐஜி விஜயகுமாரின் தனிப்பாதுகாவலர் ரவிச்சந்திரன் கோவை இராமநாதபுரம் காவல் நிலையத்தில் அளித்த எழுத்துப்பூர்வமான தகவல் கிடைத்து உள்ளது. ஈரோடு ஆயுதப்படையைச் சேர்ந்த முதல்நிலைக் காவலரான ரவிச்சந்திரன் (35) அளித்துள்ள புகாரில், “நான் ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறேன். நான் 2011ஆம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்தேன். 2016ஆம் ஆண்டு முதல் கோவை சரக காவல் துறை துணைத்தலைவருக்கு தனிப் பாதுகாப்பு காவலராக (GUN MAN) பணிபுரிந்து வருகிறேன்.

எனக்கு கோவை சரக காவல் துறை துணைத் தலைவரின் பாதுகாப்பு அலுவலுக்காக கோவை மாவட்ட ஆயுதப் படையிலிருந்து பிஸ்டல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூலை 7ஆம் தேதி நான் பாதுகாப்பு அலுவலாக சரக காவல் துறை துணைத் தலைவரின் முகாம் அலுவலகத்தில் பணியில் இருந்தேன்.

ஜூலை 6ஆம் தேதி டிஐஜி, அவர் குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டோம். டிஐஜி கோவை சரகத்திற்கு ஜனவரி மாதம் வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என்று மாத்திரை எடுத்துக் கொள்வார். நான் முகாம் அலுவலகத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே தங்கியிருந்தேன்.

டிஐஜி எப்போதும் காலை 7 மணிக்கு DSR பார்ப்பதற்காக கீழே உள்ள DSR அறைக்கு வருவார். ஜூலை 7ஆம் தேதி காலை 6.30 மணிக்கெல்லாம் அவர் கீழே வந்துவிட்டார். முகாம் அலுவலகத்தில் அலுவலில் இருந்த காவலர் ரவிவர்மாவிடம் குடிப்பதற்கு பால் கேட்டார். அவர் உடனே பால் காய்ச்சிக் கொடுத்தார். பின்பு காலை 6.40 மணியளவில் பாலை குடித்துவிட்டு, நான் தங்கியிருக்கும் அறைக்கே வந்து டிஎஸ்ஆர் கேட்டார். நான் டிஎஸ்ஆர் எடுத்துக்கொடுத்தேன்.

அப்போது நான் தங்கியிருந்த அறையில் நான் எப்போதும் போல் PISTOL வைத்திருக்கும் இடத்திற்கு சென்று என்னுடைய துப்பாக்கியை எடுத்தவர், இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று என்னிடம் பேசிக் கொண்டே அறையை விட்டு வெளியே சென்றார். நான் டி-ஷர்ட் போட்டுவிட்டு வெளியே வருவதற்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு நானும், என்னுடன் அறையில் இருந்த முகாம் அலுவலக ஓட்டுநர் அன்பழகனும் வெளியே ஓடி வந்து பார்த்தோம்.

அப்போது டிஐஜி மல்லாந்த நிலையில் தலையில் ரத்தக் காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். துப்பாக்கி அங்கேயே கிடந்தது. இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் சொல்வதற்காக அன்பழகனும் நானும் சத்தம் போட்டுக் கொண்டே மேலே ஓடினோம். எங்களது சத்தம் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்தவர் என்ன என்று கேட்டார்கள்.

நாங்கள் விவரத்தைச் சொல்ல எங்களுடன் அவரும் ஓடி வந்து டிஐஜி கிடந்ததைப் பார்த்து, உடனடியாக முகாம் அலுவலகத்தில் இருந்த பொலிரோ வாகனம் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சுமார் 7 மணியளவில் கொண்டு வந்து சேர்த்தோம். எங்களுடன் சென்ட்ரி காவலர் ஸ்ரீநாத் உடன் இருந்தார்.

அங்கு டிஐஜியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தகவல் சொன்னார்கள். மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயர் அதிகாரிக்களுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தேன். என்ன காரணத்திற்காக டிஐஜி சுட்டுக் கொண்டார் என்று தெரியவில்லை” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: "ஓ.சி.டி" மன அழுத்த நோய் என்றால் என்ன? மனநல ஆலோசகரின் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.