ETV Bharat / state

"ஓ.சி.டி" மன அழுத்த நோய் என்றால் என்ன? மனநல ஆலோசகரின் விளக்கம்!

author img

By

Published : Jul 7, 2023, 6:50 PM IST

Etv Bharat
Etv Bharat

ஓ.சி.டி பாதிப்பால் டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இது குறித்து மனநல ஆலோசகர் மருத்துவர் வந்தனா கூறிய தகவல்களை பார்க்கலாம்.

மனநல ஆலோசகரின் விளக்கம்

சென்னை : கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்தவர், விஜயகுமார் ஐபிஎஸ். இவர் இன்று காலை(ஜூலை 7) திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கு, சுரானா வழக்கில் சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்க நகைகள் மாயமான சம்பவம், சென்னை, அரும்பாக்கம் பெட் வங்கியில் நடந்த 20 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை வழக்கு உள்ளிட்டப் பல்வேறு வழக்கு விசாரணைகளை திறம்பட கையாண்டவர், விஜயகுமார் ஐபிஎஸ். ஆனால், அவர் தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. இதற்கு இடையே அவரின் தற்கொலைக்குப் பின்னால் ஏதேனும் அரசியல் தலையீடு இருக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என அவரின் தற்கொலையைத் தொடர்புபடுத்தி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

மன அழுத்ததால் தற்கொலை செய்த டிஐஜி விஜயகுமார்: இந்நிலையில், இது குறித்து கோவை அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி அருண், "ஓசிடி" (Obsessive Compulsive Disorder) எனும் மன அழுத்தத்தின் காரணமாக மட்டுமே டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும்; இதை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், டிஐஜி விஜயகுமார் தற்கொலையைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உடன் பணியாற்றிய சக காவலர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனவும்; இதில் அவருக்கு குடும்பப் பிரச்னையோ அல்லது பணிச்சுமை பிரச்னையோ இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தீவிர மன அழுத்தத்தில் இருந்த டிஐஜி விஜயகுமார், மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அதையும் தாண்டி இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது என ஏடிஜிபி அருண் கூறியுள்ளார்.

"ஓசிடி" (Obsessive Compulsive Disorder) என்றால் என்ன?

இந்நிலையில் ஈடிவி பாரத் தமிழ் ஊடகம் சார்பாக "ஓசிடி" (Obsessive Compulsive Disorder) என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? உள்ளிட்டப் பல விஷயங்கள் குறித்து மன நல ஆலோசகர் வந்தனாவிடம் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், "ஓசிடி" என்பது ஆழ்ந்த பதற்றம் தொடர்பான தீவிர மனஅழுத்த நோய் எனக் குறிப்பிட்டார். மேலும் ஓசிடியால் பாதிக்கப்பட்ட நபர், தனக்கு பிடித்த காரியங்களை மட்டுமே செய்வார் என்றும்; சில நேரம் அதை செய்யாமல் விட நினைக்கும்போது, மனது அதனை தூண்டி செய்துமுடித்துவிட தூண்டிக்கொண்டே இருக்கும் எனவும்; இதனால், சிலர் அதீத மனசோர்வுக்கு தள்ளப்படுவார்கள் எனவும்; அது ஒரு கட்டத்தில் தங்களால் கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டும் போது, சிலர் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த நோய் தங்களைப் பாதித்திருக்கிறது என்பது ஆரம்ப கட்டத்தில் நோயாளிக்கே தெரியாத நிலையில் அதை கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம் எனவும் மன நல ஆலோசகர் வந்தனா தெரிவித்தார்.

இதையும் படிங்க: Vijayakumar IPS: யார் இந்த விஜயகுமார் ஐபிஎஸ்? திறம்பட கையாண்ட வழக்குகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.