ETV Bharat / state

"வ.உ.சி உயிரியல் பூங்காவை இடமாற்றம் செய்வதை நிறுத்துக" - எஸ்.பி.வேலுமணி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 2:04 PM IST

coimbatore voc zoo relocate plan
வ.உ.சி உயிரியல் பூங்காவை இடமாற்றம் செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் - எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

coimbatore voc zoo relocate plan: கோவையில் உள்ள வ.உ.சி உயிரியல் பூங்காவை இடமாற்றம் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

கோயம்புத்தூர்: அதிமுக கோவை மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிற்கு இணங்க தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் தொழிலாளர்களுக்குக் கைக்கடிகாரம் வழங்கப்படுகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 2500 தொழிலாளர்களுக்குக் கைக்கடிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக தான்.

கோவையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட உயிரியல் பூங்காக்களில் இருந்த உயிரினங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நான் அமைச்சராக இருந்த பொழுது இந்த உயிரியல் பூங்காவை விரிவு படுத்தி மைசூர் உயிரியல் பூங்காவை விட பெரியதாக உருவாக்கத் திட்டமிட்டு இருந்தேன்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் திமுக புதிய திட்டங்கள் தராவிட்டாலும் பரவாயில்லை ஆனால் இருக்கின்ற திட்டங்களுக்கு மூடு விழா செய்கிறார்கள். கோவை மக்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு உயிரியல் பூங்கா தான். அது புறநகர்ப் பகுதியான எட்டிமடை பகுதியில் ஒரு உயிரியல் பூங்கா அமைக்க சூழல் இருந்த போதும் அதை வேண்டாம் என்று மாநகருக்கு உள்ளேயே அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தற்போது இடமாற்றம் செய்யும் முடிவை உடனடியாக நிறுத்தி இந்த பூங்காவை விரிவு படுத்தி பெரிய பூங்காவாக செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். கோவை மக்களின் கோரிக்கைக்கு இணங்க இந்த பூங்கா இடமாற்றத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

தற்போதைய முதலமைச்சர் எதிர்க் கட்சியாக இருக்கும் பொழுது அனைத்து பகுதிகளுக்கும் ஒரு பெட்டியைக் கொண்டு வந்து யார் வேண்டுமானாலும் தன்னை சந்திக்கலாம் என்று கூறினார். ஆனால் தற்போது தொழில் அமைப்பினர், தொழிற்சங்கங்கள் உள்ளிட்டோர் பல கோரிக்கைகளை வைத்தாலும் அதனை அமைச்சர்களும் கேட்பதில்லை முதலமைச்சரை சந்திக்கவும் முடியவில்லை.

வருகிற திங்கட்கிழமை கோவை தொழிற்சங்கங்களின் கோரிக்கை மனுவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பெற உள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜாமீன் கோரி பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.