ETV Bharat / state

மறுதேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு - மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு!

author img

By

Published : Mar 14, 2022, 1:39 PM IST

திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கு
திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கு

கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கிய நிலையில், மறுதேர்தல் நடத்துவதை எதிர்த்து திமுக போட்டி வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி உறுப்பினராக தேர்வாகியுள்ள திமுக-வை சேர்ந்த ஜெ.வனிதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,” பேரூராட்சி தலைவர் வேட்பாளராக ஆ.ராகினி என்பவர் கட்சியால் அறிவிக்கப்பட்டதால், போட்டி வேட்பாளராக தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

மார்ச் 4ஆம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் ராகினி 7 வாக்குகள் மட்டுமே பெற்றதால், 8 வாக்குகள் பெற்ற தன்னை பேரூராட்சி தலைவராக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிருப்தி அடைந்த ராகினியின் குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டதையடுத்து, தவறுகள் இருப்பதாக கூறி, தனக்கு வழங்கப்பட்ட சான்றிதழை, தேர்தல் அலுவலர் திரும்ப பெற்றனர்.

தவறுகளை சரிசெய்து மீண்டும் சான்றிதழை வழங்காமல், மீண்டும் தேர்தல் நடத்தபட்டு வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் அலுவலர் அறிவித்தது சட்டவிரோதம். எனவே, சூளேஸ்வரன்ட்டி பேரூராட்சி தலைவராக வெற்றிபெற்றதாக தன்னை அறிவித்து, சான்றிதழை வழங்க தேர்தல் அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 4ஆம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கிய நிலையில், மீண்டும் தேர்தல் நடத்த முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், அந்த சான்றிதழில் உள்ள கையெழுத்து தேர்தல் அலுவலரின் கையெழுத்து அல்ல என்றும், சான்றிதழில் தேதி, பிப்ரவரி 22ஆம் தேதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேதி தவறாக அச்சிடப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் கூறியதையடுத்து, வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க : வங்கி அலுவலர் என்று கூறி பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.