கோயம்புத்தூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விசாரணை வலையத்துக்குள் வருவதற்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனிடையே அவரது சகோதரர் தனபால் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராகினார்.
சுமார் 7 மணி நேரத்திற்கும் மேல் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "சிபிசிஐடியின் எஸ்பி மற்றும் 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் விசாரனை நடைபெற்றது. வருகிற 26ஆம் தேதி மீண்டும் ஆஜராக சொல்லியுள்ளனர்" என கூறினார்.
விசாரணைக்குப் பின் மனதில் இருந்த பாரம் பாதி குறைந்துள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணை தனக்கு நிறைவாக இருந்ததாகவும், விசாரணையில் வாக்குமூலம் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்களின் பெயர்களை சொல்லியுள்ளதாவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி, ஆத்தூர் இளங்கோவன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, வெங்கடேஷ், முன்னாள் எம்எல்ஏ, யூனியன் சேர்மன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆகியோருடைய பினாமி உள்ளிட்ட நபர்கள் இதில் வருகிறார்கள்" என கூறினார்.
கனகராஜ் சூட்கேஸ் கொடுத்தை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, வெங்கடேஷிடம் மூன்று பெட்டிகளும், இளங்கோவனிடம் இரண்டு பெட்டிகளும் கொடுத்ததாக தெரிவித்தார். இதில் காவல் துறை அதிகாரிகளுக்கு சம்பந்தம் இருக்கு என்று சொல்லி உள்ளேன், அது என்ன என்பது குறித்து விசாரித்து தெளிவுபடுத்தினால் போதும்" என்று கூறினார்
மேலும், கோடநாட்டில் இருந்து தனது சகோதரர் கனகராஜ்தான் பணப்பெட்டியை எடுத்து வந்ததாகவும், அவரை பெருந்துறையில் வைத்து சந்தித்தபோது ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் துரோகம் பண்ணிவிட்டதாக கூறியதாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், "இந்த விசாரணையில் நானும் சொல்ல வேண்டியுள்ளது, அவர்களும் கேட்க வேண்டியுள்ளது. அதனால் தொடர்சியாக 26ஆம் தேதியும் என்னை ஆஜாராக அழைத்துள்ளனர்” என கூறினார். மேலும், விசாரணை செய்த அதிகாரிகள் நேர்மையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.