கோவை : நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பொள்ளாச்சியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை பூ மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது.
இதில், மின்சாரம் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், " மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த பிபி கிட் மாட்டிக்கொண்டு மருத்துவர்களின் அறிவுரைகளையும் பொருட்படுத்தாமல் கரோனா வார்டுக்குள் சென்ற ஒரே முதலமைச்சர் நமது முதலமைச்சர் ஸ்டாலின்தான்.
அதிமுகவில் அண்ணாவும் இல்லை திராவிடமும் இல்லை
பதவி ஏற்ற 7 மாதங்களில் உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்புகள் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் எந்த சிக்கலும் இல்லாமல் மருத்துவமனைகள் காலியாக இருந்தன. அதற்கு காரணம் முன்னேற்பாடுகள். 20 நபர்களுக்கு தேவைப்படும் படுக்கைகளை 200 ஆக மாற்றி அதிகரித்தும், மருத்துவர்களை அதிகரிக்கும் நிர்வாகத் திறமை மிக்க முதலமைச்சராக நமது முதலமைச்சர் செயல்பட்டார்.
பொள்ளாச்சி போன்ற சிறு நகரங்களில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் அனைத்து சமுதாயத்தினரும் இரண்டற கலந்து நிற்பதற்கு காரணம் திமுக. மேலும், பொள்ளாச்சி போன்ற பகுதியில் பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் போனதற்கு அதிமுக தோல்வி அடைய வேண்டும். அதிமுகவில் அண்ணாவும் இல்லை திராவிடமும் இல்லை, அதில் கலகம் மட்டும் மிச்சம். வாழ்நாளில் மிகப்பெரிய தோல்வி அதிமுகவிற்கு தர வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதில், மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி முன்னாள் மாவட்ட கழக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க : 'பழனிசாமி மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்' - மு.க. ஸ்டாலின்