ETV Bharat / state

'பழனிசாமி மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்' - மு.க. ஸ்டாலின்

author img

By

Published : Feb 16, 2022, 7:15 AM IST

Updated : Feb 16, 2022, 7:27 AM IST

வேளாண் சட்டங்களை ஆதரித்ததற்காக உழவர்களிடம் எடப்பாடி பழனிசாமி மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பரப்புரை
மு.க.ஸ்டாலின் பரப்புரை

தஞ்சாவூர்: நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் தரப்பட வேண்டும் என்று, இடைக்காலத் தீர்ப்பை வழங்கும் அதிகாரத்தை காவிரி நடுவர் மன்றத்திற்குப் பெற்றுத்தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. பின்னர், இறுதித் தீர்ப்பைப் பெற வழக்கை விரைந்து முடிக்கப்பாடுபட்டதும் அவர் தலைமையிலான ஆட்சிதான்.

காவிரி இறுதித் தீர்ப்பும் அவர் முதலமைச்சராக இருந்த போதுதான் 2007ஆம் ஆண்டு வந்தது. இவ்வாறு நீண்ட நெடிய போராட்டங்களின் வாயிலாக, தமிழ்நாட்டின் காவிரி உரிமையைக் காப்பாற்றிய இயக்கம்தான் திமுக.

தஞ்சாவூர் மாவட்ட உழவர்களுக்கு மட்டுமல்ல - டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமல்ல - தமிழ்நாட்டு உழவர்களுக்கு மட்டுமல்ல - மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து வாக்களித்ததன் மூலமாக ஒட்டுமொத்த இந்திய வேளாண் பெருங்குடி மக்களுக்கே, துரோகியாக விளங்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி. அவரை பாஜக பழனிசாமி என்றே அழைக்கலாம். அந்தளவிற்கு பாஜக வாய்ஸில் மிமிக்ரி செய்துகொண்டு இருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் பரப்புரை

'துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி'

பச்சைத் துண்டை தோளில் போட்டுக்கொண்டு நாடகமாடி, உழவர்களுடைய தலையில் துண்டு போடத் திட்டம் போட்டவர்தான் பழனிசாமி. அப்படிப்பட்ட துரோகம் செய்த பழனிசாமியைத்தான், இந்தத் தேர்தலில் நீங்கள் தோற்கடிக்க வேண்டும். ஏற்கனவே நீங்கள் தோற்கடித்தீர்கள்.

இப்போதாவது போராடிய உழவர்களைத் தரகர்கள் என்று கொச்சைப்படுத்தியதற்கும், மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததற்கும் வேளாண் பெருங்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?. உழவர்களுக்குச் செய்த துரோகத்திற்கும் மண்டியிட்டு மன்னிப்புக் கேளுங்கள். பெரிய மனது படைத்தவர்கள் நமது உழவர்கள். நிச்சயம் உங்களை மன்னிப்பார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கொடுத்த சவுக்கடி தண்டனையை, இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவிற்கு தாருங்கள்" இவ்வாறு உரையாற்றினார்.

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயம் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தனியார் மருத்துவக் கல்லூரியில் 50% இடங்களுக்கு அரசின் கட்டணம் வசூலிக்க வேண்டும்

Last Updated : Feb 16, 2022, 7:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.