ETV Bharat / state

2022-ல் கோவையில் நடந்த முக்கிய குற்றங்கள் என்னென்ன?

author img

By

Published : Dec 31, 2022, 8:07 PM IST

கோவையில் இந்தாண்டு நடந்த முக்கிய குற்றங்களை பட்டியலிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் மக்களிடமிருந்து திருடப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்
காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்

கோயம்புத்தூர்: கோவை மாட்டத்தில் இந்தாண்டு பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் மக்களிடமிருந்து திருடப்பட்ட சுமார் 25 லட்சம் மதிப்பிலான 146 செல்போன்கள் மாவட்ட காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டும் நிகழ்ச்சி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கலந்து கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், "இந்த ஆண்டு மட்டும் சுமார் 1 கோடியே 31 லட்சம் மதிப்பிலான 750 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை போன்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு 38 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 35 கொலை வழக்குகள் மற்றும் 5 ஆதாய கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 94 கொலை வழக்கு குற்றவாளிகள் 8 ஆதாய கொலை வழக்கு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 2021 ஆம் ஆண்டு 51 கொலை வழக்குகள் மற்றும் 5 ஆதாய கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், அதில் தொடர்புடைய 88 கொலை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

தொலைந்த ஃபோன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்பி
தொலைந்த ஃபோன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்பி

மேலும் பேசுகையில், “இந்த ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது 218 வழக்குகள் போகோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு 239 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த ஆண்டு கஞ்சா விற்பனை தொடர்பாக 495 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 664 கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய 95 இருசக்கர வாகனங்களும் 16 நான்கு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 687 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் குட்கா விற்பனையை பொருத்தவரை இந்த ஆண்டு 1025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 19,400 கிலோ அளவுள்ள குட்கா மற்றும் 25 இருசக்கர வாகனங்கள் 29 நான்கு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து, “புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளில் அசம்பாவிதங்களை தடுக்க கோவை மாவட்ட காவல்துறை சார்பில்
1200 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடித்துவிட்டு வாகனங்களை இயக்க வேண்டாம். வீட்டில் இருந்து புத்தாண்டு கொண்டாடுங்கள்” என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: New year celebration: தமிழ்நாடு காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.