ETV Bharat / state

தீபாவளி பண்டிகையால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 1:57 PM IST

Air pollution is increasing in Chennai
சென்னையில் காற்று மாசுபாடு

Air pollution is increasing in Chennai: தீபாவளி பட்டாசு மற்றும் வாகனப்புகை காரணமாக சென்னையில் மிதமான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று (நவ.12) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாட தொடங்கி விட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது.

தீபாவளி பண்டிகையொட்டி சென்னையில் இருந்து கடந்த ஒரு வார காலமாக அதிகரித்துக் காணப்படும் வாகன போக்குவரத்தால் ஏற்பட்ட வாகன புகை மற்றும் தீபாவளி பட்டாசு போன்ற காரணங்களால், சென்னை நகரில் இயல்பை விட பல இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து அதிகமானோர் தங்களது சொந்த ஊருகளுக்குச் சென்றனர். இதன் காரணமாக வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

இதனால் ஏற்பட்ட புகை மற்றும் தீபாவளி பட்டாசினால் ஏற்பட்ட புகை போன்ற காரணங்களால், சென்னை நகரில் இயல்பை விட பல மடங்கு காற்று மாசடைந்துள்ளது. சனிக்கிழமை முதல் இன்று (நவ.12) காலை வரை, சென்னையில் பல்வேறு இடங்களில் காற்று மாசு 100 முதல் 200 வரை என்ற அளவில் பதிவாகி உள்ளது. இது மிதமான மாசு ஆகும்.

சென்னையில் காற்று மாசு 134 என மிதமான காற்று மாசாக பதிவாகி உள்ளது. கோவையில் 49, கடலூரில் 142, காஞ்சிபுரத்தில் 136, நாகையில் 142, தஞ்சையில் 110, திருவண்ணாமலையில் 142 எனவும் காற்று மாசு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் குறைபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில் 13, கொடைக்கானலில் 33, ஊட்டியில் 18, வால்பாறையில் 42 எனவும் பதிவாகி உள்ளது.

சென்னையில் குறிப்பாக, அபிராமபுரத்தில் 122 ஆகவும், பெருங்குடியில் 167 ஆகவும், அரும்பாக்கத்தில் 157 ஆகவும், கொடுங்கையூரில் 135 ஆகவும், ராயபுரம் 160 மற்றும் மணலியில் 151 ஆகவும் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பொதுவாக காற்று மாசு அதிகம் ஏற்படுவதில்லை. சனிக்கிழமை காற்றின் தரக்குறியீடு அளவின்படி, கும்மிடிப்பூண்டியில் 193 என்ற அதிக மாசு அளவு பதிவாகியுள்ளது.

இதேபோல் தேசிய அளவில் பாட்னாவில் காற்றின் மாசு 523 ஆக இருந்து வருகிறது. மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய காற்று தரக் குறியீடு (ஏ.க்யூ.ஐ) அளவின்படி, காற்றின் மாசு அளவு 0 - 50 வரை நல்ல சுகாதாரமான காற்று என்றும், 51 - 100 வரை இயல்பான மாசு கொண்ட காற்றாகவும், 101 - 200 வரை மிதமான மாசுக் காற்றாகவும், 201 - 300 வரை அதிக மாசுக் காற்றாகவும், 301 - 400 வரை மிக அதிக மாசடைந்த காற்றாகவும் மற்றும் 401-500 வரை அபாயகரமான மாசுக்காற்று எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று மற்றும் நாளை காற்று மாசு மேலும் உயரும் என கருதப்படுகிறது.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை: காற்று மாசு அதிகரிப்பால் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருக்குமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மக்கள் சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க பசுமை பட்டாசுகளை வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதையும் படிங்க: தீபாவளி கொண்டாட்டம் கோலாகலம்..! கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.