ETV Bharat / state

வழக்கு வாய்தாவுக்காக பெண்ணிடம் செயின் பறிப்பு.. கழிவறையில் வழுக்கி விழுந்த இளைஞர்!

author img

By

Published : Jun 15, 2023, 10:41 AM IST

செயின் பறிப்பு வழக்கு
chain snatching case

சென்னை சைதாப்பேட்டையில் நடந்துச் சென்ற பெண்ணிடம் கொடூரமான முறையில் ஏழு சவரன் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: சைதாப்பேட்டை கருணாநிதி தெருவை சேர்ந்தவர் பூங்கொடி (43). இவர் நேற்று முன்தினம் இரவு கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெரு வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பூங்கொடி கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தாலி செயினை பறித்து விட்டு தப்பிச் சென்றார். செயின் பறிப்பு சம்பவத்தின் போது பூங்கொடி கீழே விழுந்து கழுத்து மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும், இந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பூங்கொடி சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்த சைதாப்பேட்டை போலீஸார் சம்பவம் நடந்த இடத்தியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பழைய குற்றவாளியான சைதாப்பேட்டை கோத்தமேடு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ஹக்கீம்(24) என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது.இதனையடுத்து சைதாப்பேட்டை தனிப்படை போலீசார் மூலம் பல்லாவரம் பகுதியில் பதுங்கியிருந்த ஹக்கீமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர் மீது ஏற்கனவே உடுமலைப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் செயின் பறிப்பு, கொலை மிரட்டல் உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: டைமிங் ரொம்ப முக்கியம்.. பார் ஒப்பனுக்கு காத்திருந்த மது பிரியர்கள்.. புதுக்கோட்டை வைரல் வீடியோ!

ஹக்கீமிடம் நடத்திய விசாரணையில், தனது கூட்டாளி வினோத் என்கிற மணிகண்டன் என்பவருடன் வழக்கு ஒன்றின் வாய்தாவுக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்ததாகவும், விசாரணை முடிந்த பின்னர் வினோத் மற்றும் ஹக்கீம் ஒன்றாக இணைந்து மது அருந்தியதாகவும், அப்போது வழக்கின் வாய்தாவுக்கு அதிகப்படியான பணம் தேவைப்படுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் பேசி புலம்பியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை அடுத்து ஹக்கீம் மட்டும் வினோத்தின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தெருவில் நடந்துச் சென்ற பூங்கொடி என்ற பெண்ணிடம் கொடூரமான முறையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. செயின் பறிப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஹக்கீம் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் கையில் மாவுக்கட்டு போடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் வினோத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தென்காசி: சிறையில் இளைஞர் உயிரிழப்பு.. போலீசார் அடித்ததால் மரணம் என உறவினர்கள் மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.