ETV Bharat / state

K Annamalai: அதிமுக - பாஜக கூட்டணி உறுதி.. அண்ணாமலைக்கு வந்த புதிய சோதனை!

author img

By

Published : Apr 29, 2023, 7:04 AM IST

கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் நான் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய அண்ணாமலையின் நிலைப்பாடு மற்றும் பாஜக தலைமையில் கூட்டணி என்ற நிலைப்பாடு ஆகியவற்றின் கனவு என்ன ஆனது என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும், அண்ணாமலைக்கு இருக்கக்கூடிய சவால்கள் குறித்து ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் டெல்லியில் கடந்த 26-ஆம் தேதி சந்தித்தனர். இதில், அதிமுகவினர் எதிர்பார்க்காத பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். இதில், அதிமுக - பாஜக இடையே ஏற்படும் மோதல், அதிமுகவின் உட்கட்சி விவகாரம், நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு மற்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியது.

அண்ணாமலை குறித்து பல்வேறு புகார்களை அதிமுகவினர் பேச இருந்த நிலையில் அந்த சந்திப்பில் அவர் இருந்தால் பேச முடியவில்லை என கூறப்படுகிறது. திமுக மூத்த நிர்வாகிகள் சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அடுத்ததாக அதிமுக என்று குறிப்பிடாமல் அவர்களுடைய சொத்துப்பட்டியலையும் வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியிருந்தார். அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதிமுகவினருடைய சொத்துப்பட்டியலை அண்ணாமலை வெளியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், பாஜக நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய அண்ணாமலை, "அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் ஓர் அடிப்படை உறுப்பினராக செயல்படுவேன்" என கூறியிருந்தார்.

தற்போது கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அண்ணாமலை மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீப காலமாக அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. குறிப்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பின்னர் அண்ணாமலை தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டை எடுத்தாக கூறப்பட்டது. ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருவரையும் இணைத்து வைப்பதற்காக அண்ணாமலை முயற்சி எடுத்தார். அதை வெளிப்படையாக பொதுவெளியிலும் கூறினார். இதற்கு, எங்கள் கட்சி விவகாரங்களில் கருத்து கூறுவதற்கு அண்ணாமலை யார்? என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பினர்.

அதன் பின்னர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜகவிற்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. ஈரோடு கிழக்கில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால் 43,000 மூஸ்லீம் வாக்குகள் திமுகவிற்கு சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார். இதனை தொடர்ந்து, பாஜகவில் மாநில நிர்வாகியாக இருந்த நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்ததை அண்ணாமலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம், தனித்து பாஜக தலைமையில் மூன்றாவது கூட்டணியை அமைக்கலாம் என்ற முடிவுக்கு அண்ணாமலை வந்ததாக கூறப்படுகிறது. தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அண்ணாமலை வெளிப்படுத்தி வந்தார்.

பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமைத்தால், அதில், பாமக, தமாகா, ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரன், புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளை ஒன்றிணைக்க அண்ணாமலை முடிவு செய்திருந்தார். அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் 7 தொகுதிகளுக்கு மேல் பெற முடியாது எனவும் அப்படியே அதிகமான தொகுதிகள் பெற்றாலும் எடப்பாடி பழனிசாமியின் இலக்கு 2024 இல்லை எனவும் அவரது இலக்கு 2026 சட்டப்பேரவைதான் எனவும் டெல்லி பாஜக மேலிட தலைவர்களிடம் அண்ணாமலை கூறியதாக தகவல் வெளியாகியது. மேலும் தனித்து போட்டியிடும் பட்சத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் எனவும் 2026-ல் எதிர்க்கட்சியாக வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தொடர்ந்து கூறிய அண்ணாமலையின் நிலைப்பாட்டிற்கு இந்த சந்திப்பின் மூலம் டெல்லி பாஜக மேலிடம் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை தனித்துப் போட்டி என்ற நிலைப்பாடு குறித்து பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவரிடம் பேசிய போது, "அண்ணாமலை தனித்து போட்டி என்ற நிலைப்பாட்டில் இருந்தது உண்மைதான். அதை இங்குள்ள பாஜக தலைவர்களே பலரும் ஏற்கவில்லை. ஆனால் தற்போது வரை அந்த நிலைப்பாட்டில் உறுதியாகத்தான் இருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற அதிமுக தலைவர்களுடனான சந்திப்பில் இறுதியாக அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை உறுதியானது அண்ணாமலைக்கு விரும்பம் இல்லை. பாஜக மேலிட தலைவர்கள் கூறியதால் அண்ணாமலையால் எதுவும் பேச முடியவில்லை.ஆனால் அதிமுகவினருடைய சொத்துப்பட்டிலை அண்ணாமலை தயார் செய்ய ஆரம்பித்து விட்டார். ஒரு வேலை இனி வரும் காலங்களில் அதிமுகவுடன் பிரிவு ஏற்படும் போது அதிமுகவினருடைய சொத்துப்பட்டியலை அண்ணாமலை வெளியிடுவார். தனித்துப் போட்டி என்ற சமயத்திற்காக அண்ணாமலை காத்திருக்கிறார். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்வார்" என கூறினார்.

ஏற்கனவே அமித்ஷா கூட்டணி தொடர்கிறது என்று கூறிய போது, கூட்டணி தொடர்கிறது என்றுதான் அமித்ஷா கூறியுள்ளார், தொடரும் என கூறவில்லை என அண்ணாமலை கூறியிருந்தார். திமுகவினருடைய சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அதிமுகவினருடைய சொத்துப்பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கேள்வி அவர் சந்திக்க வேண்டும். மேலும் கூட்டணி உறுதி செய்யப்பட்டதால் ஊழல் இல்லாத ஆட்சி, கழகங்கள் இல்லாத ஆட்சி என்று பேசமுடியாது சூழ்நிலையே இருக்கும். எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் ஏற்பட்ட மோதலில் அண்ணாமலையை மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அண்ணாமலையின் ஒரு சில முடிவுகளுக்கு பாஜகவில் இருக்கக்கூடிய முக்கிய தலைவர்களே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. பாஜக தலைவர்கள் சந்திப்பிற்கு பின்பும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுகவை பற்றி பாஜக தொண்டர்கள் விமர்சனம் செய்வதை அண்ணாமலை கண்டிக்க வேண்டும்" என கூறியுள்ளார். இதை அனைத்தையும் அண்ணாமலை சமாளிப்பாரா? என்பதை காலம்தான் அறியும்.

அண்ணாமலையின் தனித்துப் போட்டி குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், "கூட்டணி குறித்து முடிவெடுப்பதால் அண்ணாமலையும் டெல்லிக்கு அழைத்துள்ளனர். தனித்துப் போட்டி என்று அண்ணாமலையின் நிலைப்பாட்டிற்கு இனி வாய்ப்பு இல்லை. அதிமுகவினருடைய சொத்துப்பட்டியலை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அண்ணாமலை வெளியிட மாட்டார். திமுக என்ற பொது எதிரியை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒரு புள்ளியில் இணைந்துள்ளனர். அண்ணாமலைக்கு இனிதான் அரசியலில் பல சவால்கள் காத்திருக்கின்றன. கர்நாடகா தேர்தலின் வெற்றியை பொறுத்தும் அவரது அரசியல் வாழ்க்கை அமையும் என்று கருதுகிறேன்" என கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி உறுதி.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.