ETV Bharat / state

அதிமுக - பாஜக கூட்டணி உறுதி.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

author img

By

Published : Apr 28, 2023, 1:13 PM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்யப்போகிறார்? என்பது குறித்து ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு.

AIADMK BJP alliance firmly confirmed O Panneerselvam is forced to stand alone
அதிமுக பாஜக கூட்டணி உறுதியான நிலையில் ஓபிஎஸ் தனித்து நிற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை கடந்த ஏப்.26 ஆம் தேதி சந்தித்தார். இந்த சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டர். இதில், கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேசியதாக தகவல் வெளியாகியது.

பாஜக - அதிமுக இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் இந்த சந்திப்பில் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் அரசியல் பயணம் கேள்விக்குறியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது முதல் நீதிமன்றங்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்-க்கு தொடர் தோல்விகளே கிடைத்தது. எப்படியாவது பாஜக டெல்லி மேலிடம் அதிமுகவில் மீண்டும் தலைமை பொறுப்பில் அமர்த்தி விடும் என்று நினைத்த ஓபிஎஸ்க்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

தற்போதும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டின் தான் ஓபிஎஸ் பயணம் செய்கிறார். அதற்கு சிறந்த உதரணமாக அமைந்தது ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல். இதில், எடப்பாடி பழனிசாமி முதலில் வேட்பாளரை நிறுத்தினார். ஆனால், பாஜக வேட்பாளரை நிறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு என ஓபிஎஸ் அறிவித்திருந்தார். 2017ஆம் ஆண்டு அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் பிரிந்த போது மீண்டும் இணைத்து வைத்தவர் பிரதமர் மோடி என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.

அப்போது, துணை முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் என பிரதமர் மோடி கூறியதால் ஒப்புக்கொண்டேன் எனவும் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான பிரச்சனை தொடங்கிய போது ஓபிஎஸ் அணியா? ஈபிஎஸ் அணியா? என்ற நிலைப்பாட்டை எடுக்காமல் பொதுவாகவே பாஜக செயல்பட்டது. பல முறை ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் பாஜக மேலிட தலைவர்களை சந்திக்க நேரம் கேட்ட போது மறுக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிமன்றங்களில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சாதமான தீர்ப்பு வந்ததால், அது ஓபிஎஸ் தரப்பிற்கு பின்னடைவாக அமைந்தது. இறுதியாக கர்நாடகா தேர்தலை மையமாக வைத்து இந்திய தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அங்கீகாரம் பெற்றார். அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகாரம் பெற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை உறுதி செய்தனர்.

இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுகவிற்கு 20 தொகுதிகள் எனவும் கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் எனவும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பாஜக சார்பில் 9 தொகுதிகளில் போட்டியிட விரும்பம் உள்ளதாகவும் பாஜக தலைவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. குறிப்பாக தென்சென்னை, வேலூர், கோவை, ஈரோடு, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் தனது செல்வாக்கை நிரூபிக்க கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தினார். போதிய அளவிற்கு கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து பல இடங்களில் இதைவிட பெரிதாக மாநாடு நடத்தப்படும் எனவும் தமிழகம் முழுவதும் மக்களை தேடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.

சட்டப்போராட்டம் ஒருபுறம் இருக்க மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஓபிஎஸ் அணியினர் களமிறங்கியுள்ளனர். ஓபிஎஸ், தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை கொண்டுள்ள முக்குலதோர் சமூதாயம் என்பதால் ஓபிஎஸ்சின் இணைப்பை அண்ணாமலை விரும்புகிறார். ஆனால் அதற்கான முடிவெடுக்கும் நிலையில் அண்ணாமலை இல்லை என கூறப்படுகிறது.

ஓபிஎஸ்சை பாஜக கைவிட்டதா? என பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவரிடம் கேட்கும்போது, "ஓபிஎஸ்சை பாஜக கைவிடவில்லை. இந்த சந்திப்பில் கூட ஓபிஎஸ்சை இணைத்துக்கொள்ள பாஜக மேலிட தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தியுள்ளனர். சமீபத்தில் திருச்சியில் நடந்த மாநாட்டை பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்து கூறியுள்ளனர்.

ஆனால் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதைவிட பல மடங்கு கூட்டத்தை கூட்டி மதுரையில் மாநாடு நடத்த உள்ளோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் இணைந்தே 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தனர்.இதனால் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும் ஓபிஎஸ்சை அதிமுகவுடன் இணைக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்யும்" என கூறினார்.

2021ஆம் ஆண்டு அதிமுக - பாஜக கூட்டணியில் பாஜகவிற்கு வழங்கும் தொகுதிகளில் டிடிவி தினகரனுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு முயற்சி எடுத்தார். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். அதே போன்று தற்போதும், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கு பாஜகவிற்கு வழங்கும் இடங்களில் இருந்து உள் ஒதுக்கீடு வழங்க வாய்ப்புள்ளது.

இணைப்புக்கு ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில் உள் ஒதுக்கீடு முறைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அழுத்தம் கொடுக்கும் என கூறப்படுகிறது. இது அனைத்திற்கும் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவிக்கும் நிலையில் ஓபிஎஸ்சிற்கு தனியாக போட்டியிடுவதை தவிற வேற வழி இருப்பதாக தெரியவில்லை. பாஜகவின் உள் ஒதுக்கீடு முயற்சி சாத்தியமாகுமா? அல்லது ஓபிஎஸ் தனித்து போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஓபிஎஸ்சிற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “தற்போதும் எடப்பாடி பழனிசாமி மீது வைத்துள்ள நம்பிக்கையை விட ஓபிஎஸ் மீது பிரதமர் மோடி அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகம் முழுவதும் 15% வாக்குகள் மட்டுமே இருக்கிறது.

திருச்சி மாநாட்டின் மூலம் தனது செல்வாக்கை ஓபிஎஸ் நிரூபித்து உள்ளார். இனியும் இணைந்து, கொடுத்த பதவியை வாங்கி கொண்டு போகின்ற இடத்தில் ஓபிஎஸ் இல்லை. 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தானும் முதலமைச்சர் வேட்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் செயல்படுவார். தொடர்ந்து அனைவரையும் இணைத்துக் கொண்டு மெகா கூட்டணி அமைக்க பாஜக முயற்சி எடுக்கும்" என கூறினார்.

இதையும் படிங்க: Kandaswamy IPS: அமித்ஷாவை கைது செய்தவர்.. அரசியல்வாதிகளை அலற விட்டவர்.. ஓய்வு பெறுகிறார் கந்தசாமி ஐபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.