ETV Bharat / state

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 3:57 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

tamil nadu weather report: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தொடர்ந்து பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (நவ.17) மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

18.ஆம் தேதி மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

19.ஆம் தேதி: கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 20ஆம் தேதி வரை மழை நீடிக்கும்.. வெதர் ரிப்போர்ட் சொல்வது என்ன?

20.ஆம் தேதி: கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேலும் இதைத் தொடர்ந்து 23 ஆம் தேதி வரை, ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானிலை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையும் படிங்க: ஒரு அதிகாரிக்காக பாண்டியன் விரைவு ரயில் நடைமேடை திடீர் மாற்றம்? - எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.