ETV Bharat / state

ஒரு அதிகாரிக்காக பாண்டியன் விரைவு ரயில் நடைமேடை திடீர் மாற்றம்? - எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 1:22 PM IST

MP Su Venkatesan: “ஒரு ரயில்வே அதிகாரிக்காக பாண்டியன் விரைவு வண்டி நடைமேடை மாற்றப்பட்டிருந்தது. இதானால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதற்கு தெற்கு இரயில்வே பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும்” என சு.வெங்கடேசன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

madurai-mp-su-venkatesan-comment-about-special-train-for-officers
சு வெங்கடேசன் எம்பி கண்டனம்

மதுரை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே துறை அதிகாரி ஒருவருக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் நடைமேடை தெரியாமல் அங்கும் இங்குமாய் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளதாக சு.வெங்கடேசன் எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையிலிருந்து மதுரை செல்ல பாண்டியன் விரைவு ரயிலில் பயணிக்க நேற்று இரவு (நவ.16) எழும்பூர் ரயில் நிலையம் வந்தேன். வழக்கமாக பாண்டியன் விரைவு வண்டி பயணிகள் வந்து ஏறுவதற்கு வசதியாக உள்ளே நுழைந்ததும் எதிர்படும் நடைமேடையான நான்காவது நடைமேடையில்தான் நிறுத்தப்படும்.

எழும்பூர் ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை அதுதான் முதல் நடைமேடை. நேற்று வழக்கத்துக்கு மாறாக பாண்டியன் விரைவு வண்டி ஐந்தாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டிருந்தது. சுமார் ஆயிரம் பயணிகள் இங்கும் அங்குமாக அலைக்கழிந்து, படிக்கட்டில் ஏறி அடுத்த நடைமேடையை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.

வயதானவர்கள், கைக்குழந்தையோடு வரும் தாய்மார்கள் எல்லாம் பரிதவிப்போடு விரைந்து கொண்டிருந்தார்கள். நான் உள்ளே நுழைந்ததும் ரயில் நிலைய அதிகாரி ஒருவர் “பாண்டியன் அடுத்த நடைமேடையில் நிற்கிறது சார்” என்றார். நான்காவது நடைமேடையிலும் ஒரு ரயில் நின்று கொண்டிருந்தது. பயணிகள் யாருமே ஏறாத ரயிலாக அது இருந்தது. “இந்த வண்டி எங்கே செல்கிறது? இதை ஏன் நான்காவது நடைமேடையில் நிறுத்தியுள்ளீர்கள்?” எனக் கேட்டேன்.

’இரயில்வே போர்டு உறுப்பினர் ரூப் நாராயண் சங்கர் வந்துள்ளார். நாளை இராமேஸ்வரத்துக்கு ஆய்வுக்குச் செல்கிறார். அவருக்காக இந்த வண்டி நிற்கிறது’ என்றார். இரயில் நிலைய கட்டுமானப்பணி, தண்டவாள பழுது நீக்கும் பணி நடைபெறுகிறது என்றால், வேறு நடைமேடைக்கு ரயில்கள் மாற்றப்படுவதை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால், ஒரு மனிதருக்காக பத்து பெட்டிகள் கொண்ட முழு ரயில், அந்த ஒரு நபர் படிக்கட்டுகளில் மேலேறி இறங்கி அடுத்த நடைமேடைக்குச் செல்லும் சிரமத்தைக் கொடுக்காமல் வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதற்காக, சுமார் ஆயிரம் பயணிகள் பயணிக்கும் பாண்டியன் விரைவு வண்டியை அடுத்த நடைமேடையில் நிறுத்தி மக்களை அலைக்கழித்த கொடுமை.

அதுவும், அந்த ரயில் இரவு 10.40க்குத்தான் புறப்பட உள்ளது. ஆனால், பாண்டியன் விரைவு வண்டியோ இரவு 9.40க்கு புறப்படுகிறது. ஒரு மணிநேரம் க்கழித்து புறப்படப்போகும் ஒரு மனிதருக்காக இவ்வளவு ஏற்பாடு. பிரிட்டீஷ் காலத்திலிருந்த நிர்வாக அடிமைத்தன மதிப்பீடுகளும், பழக்கங்களும் இன்னும் அதிகம் நடைமுறையில் இருக்கும் துறையாக ரயில்வே துறை இருக்கிறது. எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், மக்களாட்சியின் ஜனநாயக விழுமியங்களை மீறும் உரிமை யாருக்கும் இல்லை.

காலனிய ஆட்சியில் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை தங்களின் வசதிக்காக இன்றளவு கடைபிடிக்கிற அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். ஒரு அதிகாரியின் நலன் கருதி, ஆயிரம் பயணிகளை அலைகழித்தற்காக தெற்கு ரயில்வே பொது மேலாளர் பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மோசமடையும் உடல்நிலை.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு? மருத்துவக்குழு வெளியிட்ட தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.