சென்னை: வடகிழக்குப் பருவமழையினால் சென்னையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் தெருவில் மழை நீர் வெளியேற்றும் பணியினை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை டிஜிபி கரண் சின்ஹா பார்வையிட்டு இன்று (நவ.9) ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கரண் சின்ஹா, "சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது எனக் கண்டறிந்து இருக்கிறோம்.
அதனை உடனடியாக வெளியேற்றும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டுள்ள கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் நீர் வெளியேற்றும் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. சென்னையில் முக்கியப் பகுதிகளில் தேங்கியுள்ள நீர் நாளைக்குள் வெளியேற்றப்படும்'' என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அப்பகுதி மக்கள், "பல தெருக்களில் இருந்து வெளியேற்றும் மழைநீர் தங்களது தெருவிற்குள் வருகிறது.
முறையாக சாலைகள் அமைக்காததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகள் மேற்கொள்ளாததும் தான் மழை நீர் தேங்க காரணம்" எனக் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: கனமழை: பள்ளி, கல்லூரிக்கு இரண்டு நாள் விடுமுறை