ETV Bharat / state

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தாயார் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல - நீதிமன்றத்தில் போலீசார் வாதம்

author img

By

Published : Feb 22, 2023, 10:05 PM IST

நீதிமன்றத்தில் போலீசார் வாதம்
நீதிமன்றத்தில் போலீசார் வாதம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கோரி மாணவியின் தாயார் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தமிழ்நாடு காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்தார். மாணவி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. மறு உடற் கூறாய்வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது விசாரணை முடியும் நிலையில் இருப்பதாகவும், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாணவி மரணமடைந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மாணவியின் தாயார் வி.பி.செல்வி சார்பில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்க கோரி தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மனு அளித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் இந்த குழுவை அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருத்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று (பிப். 22) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, மாணவி மரணத்தை தொடர்ந்து பதிவான வழக்கின் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், அதில் முழு திருப்தி இல்லாததால் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

காவல் துறை தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், சம்பவம் நடந்த சில நாட்களிலேயே சிபிசிஐடி விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நிலுவையில் இருப்பதால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிட்டார். மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வு அறிக்கையை பெற்ற பின், இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் 4 வார கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் விளக்கமளித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாணவியின் தாய் தாக்கல் செய்த மனுவை, ஏற்கனவே நிலுவையில் உள்ள தந்தையின் மனுவுடன் சேர்த்து மார்ச் 8ஆம் தேதி பட்டியலிட உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: நரபலி கொடுக்க துடிக்கும் வளர்ப்பு தாய்.. சென்னைக்கு தப்பி வந்த பெண்.. ஐகோர்ட்டில் போட்ட மனு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.