ETV Bharat / state

தீபாவளி விடுமுறையைத் தொடர்ந்து கனமழை தொடங்கும்.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 2:32 PM IST

Etv Bharat
Etv Bharat

TN Weather update: தீபாவளி விடுமுறைக்கு மறுநாளான 14 மற்றும் 15ஆம் தேதிகளில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: வருகிற 14 மற்றும் 15ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 14ஆம் தேதி வாக்கில் உருவாகக் கூடும். மேலும் தற்போது கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (நவ.12) மற்றும் நாளை (நவ.15) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதைத் தொடர்ந்து அடுத்து வரும் 14, 15 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பும், இதைத் தொடர்ந்து வரும் நாட்களில் 18ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக் கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக் கடல் பகுதிகள்: நாளை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுநாள் (நவ.14) தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தொடர்ந்து வருகிற 15ஆம் தேதியன்று, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சூடான் டார்பூர் பகுதியை கைப்பற்றிய ஆர்எஸ்எப் ராணுவம்.. ஒரே நாளில் 800 உயிரிழப்பு என ஐ.நா தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.