ETV Bharat / state

ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 7:29 PM IST

Etv Bharat
Etv Bharat

TN School teachers: ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து வகையான 'ஆசிரியர்கள் நேரடி நியமனம்' செய்வதற்கான உச்ச வயது வரம்பினனை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (அக்.22) வெளியிட்ட தகவலில், '04.10.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்திருந்தோம். அதன்படி 17 நாள்களிலேயே சொன்னதை செய்து முடித்து தற்போது, அரசாணையையும் வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிரியப் பெருமக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். #திராவிட_மாடல்' என கூறியுள்ளார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருந்த ஆசிரியர்கள் தங்களுக்கு திமுக தேர்தல் அறிவிப்பில் கூறியபடி, பணி நியமனத்திற்கான அரசாணை 149 ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி செப்டம்பர் மாதம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி (TET) பெற்ற கூட்டமைப்புடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வு கூறிய வயது வரம்பு உயர்த்தப்படும் என உறுதி அளித்திருந்தார். அதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், ஏற்கனவே ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40-லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45-லிருந்து 50 ஆகவும் சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் உயர்த்தியும், இந்த உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

அதனை மனிதவள மேலாண்மைத்துறையின் அரசாணையின்படி, ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை, 1.1.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு 47 வெளியிடப்பட்டுள்ளதாகவும் நிர்ணயம் செய்தும் ஆணைகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 4.10.2023 அன்று வெளியிட்ட அறிவிப்பில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் பல்வேறு ஆசிரியர் சங்க அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்ததைத் தொடர்ந்து பின்வருமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், 'TET தேர்வில் தேர்ச்சிப்பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணிநாடுநர்களுக்கு (ஆசிரியர்களுக்கு), உச்ச வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58 ஆகவும் ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. மேலும், பல்வேறு வழக்குகள் ஆசிரியர் தெரிவு சார்ந்து உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது' என தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, 'பள்ளிக்கல்வித்துறையின் கீழுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலை கல்விப்பணிளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள அனைத்து வகையான ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு விதிகள் முறையே விதி எண் 6(a), விதி எண் 5 மற்றும் விதி எண் 6-ல் தெரிவிக்கப்பட்டுள்ள உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதர பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான நியமனத்திற்குரிய போட்டி தேர்வில் பங்கேற்க வயது வரம்பில் இதன் மூலம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப சட்ட ஆலோசனை பெற்ற பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.