சாலை விபத்துக்களை குறைக்க பரிந்துரை குழு- தமிழ்நாடு அரசு அதிரடி

author img

By

Published : Apr 2, 2022, 8:28 AM IST

சாலை விபத்துக்களை எவ்வாறு குறைக்கலாம் ?.. பரிந்துரைகளை வழங்க சிறப்பு பணிக்குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யச் சிறப்புப் பணிக்குழுவை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முன் முயற்சியால் தமிழ்நாட்டில் புதிய புரட்சிகர திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை (ஆக.5) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது.

இதனையடுத்து, சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சை வழங்குவதற்கு இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 'நம்மைக் காக்கும் 48' என்ற திட்டம் மருத்துவத்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத் துறையை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து முதலமைச்சர் அறிவித்தார். முதலமைச்சர் இந்தத் திட்டத்தை டிசம்பரில் தொடங்கிவைத்தார்.

இன்னுயிர் காப்போம்
இன்னுயிர் காப்போம்

இதற்காக 609 மருத்துவமனைகளில் 204 நெடுஞ்சாலைகள் ஒட்டியுள்ள அரசு மருத்துவமனைகளும், 405 தனியார் மருத்துவமனைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

எந்த நாட்டை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக 1 லட்சம் ரூபாய் அரசு வழங்கி, விபத்தினால் காயமுற்றவரைக் காக்கும் சிகிச்சைக்கு வழங்கப்படும்.

இன்னுயிர் காப்போம்
இன்னுயிர் காப்போம்

இந்நிலையில், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய, ஏடிஜிபி வினித் தேவ் வான்கடே தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் தரேஷ் அகமது, நிதித்துறை செயலாளர் அருண் ராய் ஆகியோர்கள் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

மேலும், சாலைப்போக்குவரத்தின் போது விபத்து மற்றும் உயிரிழப்பைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட கால தீர்வுகளைக் கண்டறிதல் இக்குழுவின் முக்கிய பணியாகும்.

தமிழ்நாடு சாலைப்பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்குவதற்கான பணிகளைச் செய்தல், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விபத்துக்களைத் தடுக்க குறுகிய கால திட்டத்தைச் செயல்படுத்துதல் ஆகியவையும் இக்குழுவின் பணியாகும்.

அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் நிபுணர்களையும் கலந்து ஆலோசித்துத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்றும் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து செயல்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஆட்டிச குழந்தைகள் அல்ல, அதிசயக் குழந்தைகள்' - மருத்துவர் ராணி சக்ரவர்த்தி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.