ETV Bharat / state

ஊழலைப் பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை: முதலமைச்சர் ஸ்டாலின் பாய்ச்சல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 7:12 PM IST

Updated : Aug 27, 2023, 7:27 PM IST

TN Chief Minister Stalin
TN Chief Minister Stalin

ஊழலை ஒழிப்பது பற்றி பேச பிரதமர் மோடிக்கு யோக்கிதை இல்லை என்றும், சிஏஜி அறிக்கையில் மோடி அரசின் ஊழல்கள் வெளிவந்துவிட்டன என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 27) திருவாரூர் மாவட்டம் பவித்திரமாணிக்கத்தில் நடைபெற்ற நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதலமைச்சர் மணமக்களை வாழ்த்தினார். பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திமுகவிற்கும் எப்பொழுதும் நட்பு உண்டு. அந்த நட்பு தேர்தலுக்காக மட்டுமல்ல, கூட்டணியில் இருக்கும் நேரத்தில் ஏற்படும் நட்பு மட்டுமல்ல, கொள்கை நட்பு, அதுதான் முக்கியம். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, இப்போது ஆளுங்கட்சியாக இருக்கிறபோதும் தொடர்கிறது. இது என்றைக்கும் தொடரும். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாகத் தொடரும்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் ஆட்சி மாற்றத்திற்காக நடைபெறும் தேர்தலாக நினைத்து விடக்கூடாது. இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும், பாசிச பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாட்டைக் காப்பாற்றிவிட்டோம். இந்தியாவைக் காப்பாற்றும் நிலைக்கு நாம் இப்போது வந்திருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகத்தான் 'இந்தியா' கூட்டணி அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சியை உருவாக்கித் தருவதற்கு நீங்கள் எல்லாம் எவ்வாறு காரணமாக இருந்தீர்களோ, அதேபோல் நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக மத்திய அரசு அமைவதற்கு, அது நல்லரசாக அமைவதற்கு நீங்கள் எல்லாம் காரணமாக இருக்க வேண்டும்.

இந்தியா என்ற கூட்டணி உருவாக தமிழ்நாட்டில் இருக்கும் திமுக கூட்டணி காரணமாக இருக்கிறது என்ற ஆத்திரம் பிரதமர் மோடிக்கு உள்ளது. அதனால்தான் எங்கு சென்றாலும், அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, வெளிநாடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி - எங்கு சென்றாலும் இன்றைக்கு நாம் அமைத்திருக்கும் கூட்டணியைப் பற்றி விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருக்கிறார், கொச்சைப்படுத்தி பேசுகிறார். அதிலும், தமிழ்நாட்டில் இருக்கும் நம்முடைய அணியைப் பற்றி, குறிப்பாக திமுகவைப் பற்றி இன்றைக்கு அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. அந்த அளவிற்குக் கொச்சைப்படுத்திப் பேசுகிறார்.

தமிழ்நாட்டில் ஊழல் வந்துவிட்டதாகவும், ஊழலை ஒழித்தே தீருவேன் என்றும் பிரதமர் பேசுகிறார். ஊழலைப் பற்றி பேசுவதற்கான யோக்கியதை பிரதமர் மோடிக்கு இருக்கிறதா? -உங்களுடைய வண்டவாளம் எல்லாம் இப்போது சி.ஏ.ஜி. ஆதாரங்களோடு வெளியே வந்துவிட்டது. ஒன்றல்ல இரண்டல்ல 7 விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

பாரத்மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்டம், சுங்கச் சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புற அமைச்சக ஓய்வூதியத் திட்டம், எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்டம் ஆகியவற்றில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. துவாரகா விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தில், ஒரு கிலோ மீட்டருக்கு 18 கோடி ரூபாயாக இருந்த செலவு, 250 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பாரத்மாலா திட்டத்தில், ஒரு கிலோ மீட்டர் தொலைவு நெடுஞ்சாலை அமைக்க நிர்ணயித்ததைவிட, இரண்டு மடங்கு அதிகமாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த விபரங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த நிறுவனம் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறது. அதே சி.ஏ.ஜி. அறிக்கையின்படி மத்திய அரசுத்துறைகளில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, மத்திய அமைச்சகங்களிலேயே உள்துறை அமைச்சக அதிகாரிகள், அலுவலர்கள் மேல்தான் கடந்த வருடம் அதிகமான ஊழல் புகார்கள் பதிவாகி இருக்கின்றன. மத்திய அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு எதிராக, கடந்த ஆண்டு மட்டுமே, 1 லட்சத்து 15 ஆயிரத்து 203 புகார்கள் பதிவாகி இருக்கின்றன. இதில் உள்துறை அதிகாரிகள் மீது மட்டும் 46 ஆயிரத்து 643 புகார்கள் பதிவாகி இருக்கின்றன.

இவர்கள் செய்த தவறை எல்லாம் மூடி மறைத்து, நம் மீது வீண்பழியை சுமத்தி, இவற்றைப் பற்றி எல்லாம் திமுகவும், திமுக கூட்டணிக் கட்சிகளும் பேசுகிறதே என ஆத்திரப்பட்டு, சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, வருமானவரித்துறையை வைத்து மிரட்டி பார்க்கிறார்கள். இதையெல்லாம் கண்டு அஞ்சி நடுங்கிவிடுகிற கட்சி திமுக அல்ல, திமுக என்பது பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு எல்லாம் நாம் அஞ்சி விடமாட்டோம்.

தங்களுடைய லஞ்ச லாவண்யங்களை மூடி மறைப்பதற்காக, இன்றைக்கு மதவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். இனி வரும் காலகட்டங்களில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல, இந்தியாவையும் நீங்கள் ஏமாற்ற முடியாது. அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் இந்தியா கூட்டணி அமைந்திருக்கிறது" என்று கூறினார்.

இதையும் படிங்க: Seeman: தமிழ்நாட்டில் மோடி எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் - சீமான்

Last Updated :Aug 27, 2023, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.