மாற்றுத்திறனாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி; 2 பெண்கள் உட்பட மூவர் கைது!

author img

By

Published : Dec 29, 2022, 6:53 AM IST

Updated : Dec 29, 2022, 10:39 AM IST

2 பெண்கள் உட்பட மூவர் கைது

ஆன்லைனில் கடன் பெற்று தருவதாகக் கூறி, பார்வையற்ற மாற்றுத்திறனாளியிடம் பண மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை: சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சரவணன் என்பவரிடம், கடந்த 2020 ஆம் ஆண்டு அவரை சிலர் செல்போனில் தொடர்புகொண்டு லோன் தருவதாகக் கூறியுள்ளனர். பார்வையற்ற மாற்றுத் திறனாளியான உங்களுக்கு 1% என்ற குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக சரவணனிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை சம்மதிக்க வைத்துள்ளனர்.

அதன்பின் கடன் பெற்றுத் தருவதற்காக பல்வேறு காரணங்களைக் கூறி, தவணை முறையில் சரவணனிடம் இருந்து 3.04 லட்சம் ரூபாய் வரை பணத்தையும் அந்த நபர்கள் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களைத் தொடர்புகொண்ட சரவணன் அவர்களின் செல்போன் எண்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதை அறிந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சரவணன் அளித்த செல்போன் தொடர்பு எண் விவரங்களை வைத்து கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், குற்றவாளிகள் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. பின்னர் டெல்லி விரைந்த தனிப்படை காவல்துறையினர் அங்கிருந்து தமிழக பெண்களான சாந்தி (37), வசந்தி (44) மற்றும் டெல்லியைச் சேர்ந்த முனீஷ் சர்மா (44) ஆகிய மூவரை கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களை சென்னை அழைத்து வந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பார்வையற்ற மாற்றுத் திறனாளியான சரவணனைப் போல மேலும் பலரை இந்த கும்பல் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அம்மூவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோசடி பணத்திலிருந்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளியான சரவணனுக்குச் சேர வேண்டிய 3.04 லட்சம் ரூபாய் பணத்தை, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவரை நேரில் வரவழைத்து வழங்கினார். தனது பணத்தை மீட்டுக்கொடுத்ததற்காகச் சரவணனும் காவல் ஆணையருக்கு நன்றி தெரிவித்தார்.

பணத்தை மீட்டு தந்த காவல்துறையினர்
பணத்தை மீட்டு தந்த காவல்துறையினர்

‘குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகக் கூறி தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசும் முன்பின் தெரியாத நபர்களின் பேச்சை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்’ என பொதுமக்களுக்குச் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போதையில் போலீசாரிடம் சிக்கிய திருடர்கள் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Last Updated :Dec 29, 2022, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.