ETV Bharat / state

’ஈரோட்டில் பிறந்த ஓர் வள்ளுவர் தான் பெரியார்...!’ - தொல். திருமாவளவன்

author img

By

Published : Oct 4, 2022, 10:33 AM IST

’ ஈரோட்டில் பிறந்த ஓர் வள்ளுவர் தான் பெரியார்...!’ - விசிக தலைவர் திருமாவளவன்
’ ஈரோட்டில் பிறந்த ஓர் வள்ளுவர் தான் பெரியார்...!’ - விசிக தலைவர் திருமாவளவன்

மக்களின் அத்திவாசிய பிரச்சனைக்காக ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தவில்லை, மதவாத கருத்துகளை இளைஞர்களிடம் புகுத்தி பிரிவினைவாதத்தை ஏற்படுத்த தான் இந்த பேரணியை நடத்த துடிக்கின்றனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை: பேராசிரியர் ஜெகதீசன் எழுதிய ’வாழும் வரைக்கும் வள்ளுவம்’ நூல் வெளியீட்டு விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி நூலை வெளியிட விசிக தலைவர் தொல். திருமாவளவன் பெற்றுக் கொண்டார். அதன்பின் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “வள்ளுவம் தமிழினத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே பொதுவானது. அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது. மனிதகுலம் வாழும் வரை வள்ளும் வாழும், காலத்தால் வழிபடும் மதத்தை கூட மாற்றிக்கொள்வோம், ஆனால் வள்ளுவத்தை மாற்ற முடியாது.

பெரியாருக்கு சில பேர் பூனூல் போட்டு பார்க்கிறார்கள், சில பேர் காவி உடுத்திப் பார்க்கிறார்கள். பெரியார் காவியை விரும்பி இருந்தால் சங்கராச்சாரியார்களுக்கு இடம் இருந்திருக்காது. தீவிர ஆன்மிக குடும்ப பின்னணியில் பிறந்து, சாதி, மதம் இல்லை என்று சொன்னவர் பெரியார். உழைக்கும் மக்களின் குரலாக மாறி, அவர்களின் விடுதலைக்கு போராடியவர் பெரியார்.

ஈரோட்டில் பிறந்த வள்ளுவர் தந்தை பெரியார். வள்ளுவமும், பெரியாரின் கொள்கைகளும் ஒன்று தான். பெரியார் பிறந்த இந்த மண்ணில் ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கத்தை நாம் அனுமதிக்கலாமா? மதத்தின் பெயரால் தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்றிட வித்திடுகிறார்களே அதை நாம் அனுமதிக்க போகிறோமா?

ஆர்எஸ்எஸ் பேரணி மூலம் சமூகநீதியை பாதுகாக்க போகிறார்களா? ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது மட்டும்தான் அவர்களின் நோக்கம். புதுச்சேரியில் மூன்று அமைச்சர்கள் அரைக்கால் சட்டை போட்டு ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்து கொள்வது எவ்வளவு வெட்க கேடானது.

ஆர்எஸ்எஸ் சராசரி ஜனநாயக இயக்கம் இல்லை, அவர்கள் பாசிச இயக்கம். மக்களின் அத்திவாசிய பிரச்சனைக்காக ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தவில்லை, மதவாத கருத்துகளை இளைஞர்களிடம் புகுத்தி பிரிவினைவாதத்தை ஏற்படுத்த தான் இந்த பேரணியை நடத்த துடிக்கின்றனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு 18 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்பு உள்ளது. தீவிரவாத அமைப்பு தொடர்பு உள்ளது என ’பாப்புலர் பிராண்ட் அப் இந்தியா’ என்ற அமைப்பை தடை செய்த ஒன்றிய அரசு, 18 குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்யவில்லை.

இதுபோன்ற பேரணிக்கு நாம் ஆதரித்தால் அடுத்த 10 ஆண்டுக்கு பிறகு நாம் கருப்பு, நீலம், சிவப்பு சட்டை அணிய முடியாது. மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். தமிழ்நாடு கருத்தால் முற்போக்கானது. 11ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் நாம் காட்டுகிற ஒற்றுமையை பார்த்து அவன் வாலை சுருட்டிக் கொண்டு ஓட வேண்டும்.

திராவிட இயக்கத்தின் பாசறை தளபதி தான் திமுகவில் இருக்கிறார். அவருக்கு பெயர் ஆ ராசா. எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்க்கொள்ளக்கூடிய துணிச்சல் கொண்ட முதலமைச்சராக நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் கலவையாக நமது முதலமைச்சர் இருக்கிறார். காங்கிரஸ், இடதுசாரி அமைப்புகளை ஒன்றிணைத்து சந்தித்த தேர்தலில் எல்லாம் வெற்றி பெற்றவர் மு.க.ஸ்டாலின். சமூக நீதிக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை முதலமைச்சர் பார்த்து கொண்டு இருக்கிறார், எரிமலை பார்ப்பதற்கு அமைதியாக இருப்பது தெரியும் , அது வெடிக்கும் போது தான் அதன் தீவிரம் தெரியும் என்றார்

அதன்பின் பேசிய கி.வீரமணி, “திராவிட மாடல் அரசின் திட்டங்களை, வள்ளுவரின் திருக்குறளோடு ஒப்பிட்டு இந்த நூலின் எழுதியுள்ளார் ஜெகதீசன். சமுகநீதிக்கு எதிரியான கருத்துடைய மனு தர்மம் குறித்து எடுத்துரைத்தால், நாங்கள் தவறாக கூறுவதாக எங்களை குறை கூறுகின்றனர்.

ஒருவருக்கு அடிபட்டுள்ளது ஸ்கேன் செய்து பார்த்ததில் எழும்பு உடைந்துள்ளது என்று கூறினால், ஸ்கேன் எந்திரம் தவறு கூறுகிறது என்று அதை உடைப்பவர்கள் தான் அதிகம். நாங்கள் எல்லாம் மனு தர்மத்தில் உள்ள சமூகநீதிக்கு எதிராக உள்ள கருத்துகளை கூறும் ஸ்கேன் எந்திரம்.

எல்லாம் நோய்க்கும் மருந்து உள்ளது, மதம் என்னும் நோய்க்கு ஈரோடு தான் மருந்து. இந்தியாவில் உள்ள அரசுக்கு எடுத்துகாட்டு அரசாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. நமது வரி பணத்தில் ஆளுநர் மாளிகையில் அமர்ந்து கொண்டு, சனதானம் என்பதே மனு தர்மம் தான், மனு தர்மத்தையும் மதவாத கொள்கையையும் திணிக்க பார்க்கிறார்கள். சமூக நீதிக்காக வரும் 11 ஆம் தேதி நடைபெறும் அனைவரும் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி சமூகநீதிக்கான கொள்கை கூட்டணி” என்றார்.

இதையும் படிங்க: அமைச்சர் சேகர்பாபுவால் எனது உயிருக்கு ஆபத்து..? - உயர் நீதிமன்ற வழக்கறிஞர் புகார்


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.