ETV Bharat / state

வட்டாரக் கல்வி அலுவலர் பணி தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

author img

By

Published : Jul 3, 2023, 10:11 PM IST

செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பம்
வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பம்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் வட்டாரக் கல்வி அலுலவர் பணிக்கு ஜூலை 12 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றுவதற்கு வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்வதற்கான தேர்வுகள் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்றும், அந்தப் பணியிடத்திற்கு ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் மேலும் ஜூலை 12 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்க கால நீடிப்பு வழங்கி உள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட்டாரகக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டாரக்கல்வி அலுவலர் பணியில் 33 இடங்கள் நிரப்பப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம், விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை நீடித்து அறிவித்துள்ளது. அதன்படி வட்டாரக் கல்வி அலுலவர் பணிக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் அவகாசம் கேட்டுள்ளதால், ஜூலை 12 ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்கும் போது செயல்பாட்டில் உள்ள இமெயில் ஐடி, செல்போன் எண் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் தேர்வுக் கட்டணமாக எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 300 ரூபாயும் பொது பிரிவினருக்கு 600 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த அறிவிப்பில், இந்த பணிக்கான வயது வரம்பாக 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசின் விதிமுறைகளின் படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பினருக்கு 5 ஆண்டுகள் வயது சலுகை அளிக்கப்படுகிறது என அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு கல்வி தகுதியையும் அறிவித்துள்ளது.

அதில் பல்கலைக்கழக மானியக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன், பிஎட் பட்டப்படிப்பினை முடித்திருக்க வேண்டும். மேலும் மாநிலத்தின் மாெழியான தமிழ் மொழியில் போதுமான அளவிற்கு அறிவு பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி கட்டாயம் தமிழ் பாடத் தேர்வில் தகுதி பெற வேண்டும். இந்தத் தேர்வின் முக்கிய அம்சமாக தமிழ் மொழிப்பாடத்தில் 10ஆம் வகுப்பு நிலையில் 30 கேள்விகள் கேட்கப்படும்.

அந்த கேள்விகளுக்கு 30 நிமிடத்தில் விடை எழுத வேண்டும்.பின்னர் இந்த தேர்விற்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெறப்பட வேண்டும். 20 மதிப்பெண்கள் எடுத்தால் தகுதி பெற்றவராக அறிவிக்கப்படுவர். இந்த தேர்வு ஒஎம்ஆர் முறையில் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். கட்டாயம் தமிழ் தேர்வில் தகுதிப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. தகுதி தேர்வைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறும். தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கான தண்டனைகளும் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Padma award 2024: பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு... கடைசி தேதி என்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.