ETV Bharat / state

கடம்பூர் காட்டாற்று வெள்ளத்தை கயிறு கட்டி கடக்கும் மக்கள்.. 3 ஆண்டுகள் கடந்தும் முடிவுறாத பாலப் பணிகள்! - Kadambur flood

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 4:54 PM IST

Erode Rain Update: ஈரோட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாக்கம்பாளையத்திற்குச் செல்ல பாலம் இல்லாததால் கிராம மக்கள் கடம்பூர் காட்டாற்றின் குறுக்கே கயிறு கட்டி கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தை கயிறு மூலம் கடந்த மக்கள் புகைப்படம்
வெள்ளத்தை கயிறு மூலம் கடந்த மக்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மழை வெள்ளத்தை கயிறு மூலம் மக்கள் கடந்த காட்சி (credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: தமிழகத்தில் கோடை வெயில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்த நிலையில், கோடையைக் குளிர்விக்கும் விதமாக பருவமழையானது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. அந்த வகையில், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர், எக்கத்தூர், காடகநல்லி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, வனப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் பள்ளங்களில் செந்நிற மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு ஓடைகளிலிருந்து வந்த வெள்ளநீர் காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து, கடம்பூர் அணைக்கரை பள்ளத்தில் கலந்ததால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

காட்டாற்று வெள்ளம் காரணமாக, இரு பள்ளங்களைக் கடந்து செல்லும் அரசுப் பேருந்து, பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்க்கரை பள்ளம் வரை மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அங்கு பேருந்தில் இருந்து இறங்கும் கிராம மக்கள், அங்கிருந்து காட்டாற்று வெள்ளத்தை தாண்டி பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டதால், இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்லும் மக்கள்; வனத் துறை எச்சரிக்கை! - Sakkaraipallam Floods

கடம்பூர் மாக்கம்பாளையம் இடையே உள்ள குரும்பூர், சர்க்கரைப்பள்ளத்தின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஓடைகளிலிருந்து வந்த வெள்ளநீர் கடம்பூர் அணைக்கரை பள்ளத்தில் கலந்ததால், வெள்ளநீர் அணைக்கரை தரைப்பாலத்தை மூழ்கடித்துள்ளது. இதனால் சிறிய டெம்போ கூட பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு எந்த வாகனங்களும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் தற்போது காட்டாற்று வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் கயிறு கட்டி மறுகரைக்குச் செல்கின்றனர். நீரின் வேகம் அதிகமாக இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் காட்டாற்றை கடந்து செல்கின்றனர். தற்போது, இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஏழு கோடி செலவில் இரு உயர் மட்ட பாலங்களுக்கு கட்டுமானப் பணி துவங்கிய நிலையில், கட்டுமானப் பணி நிறைவு பெறாத காரணத்தால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அச்சத்துடன் ஒவ்வொரு முறையும் காட்டாற்றைக் கடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, ஆற்றின் குறுக்கே விரைந்து நீர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கடம்பூர் மலைப்பகுதியில் கனமழை.. தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்! - Heavy Rain In Kadambur Hills

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.