ETV Bharat / state

Manual Scavenging Deaths: தொடரும் 'மலக்குழி மரணங்கள்'; முதலிடத்தில் தமிழ்நாடு!

author img

By

Published : Jan 11, 2023, 7:22 PM IST

Etv Bharat
Etv Bharat

Manual Scavenging Deaths: டிஜிட்டல் உலகமயமாக்கல் குறித்துப் பேசி வரும் நிலையில், நம் கண் முன்னே அவ்வப்போது நடக்கும் 'மலக்குழி மரணங்கள்' நவீனமயமாக்கல் எங்கிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இதுகுறித்த ஒரு ஆய்வறிக்கை என்ன சொல்கிறது? என இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Manual Scavenging Deaths: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் 'மலக்குழி மரணங்கள்' (Manual Scavenging Deaths in TamilNadu) மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகரித்துள்ளது என சமீபத்தில் டாக்டர் கல்யாணி தலைமையில் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நவீன உலகமாக மாறிவரும் தற்போதைய சூழலில் இன்னும் கழிவுநீர் சுத்தம் செய்ய மனிதர்களையே பயன்படுத்தும் அவலநிலை தொடர்ந்து இருந்துகொண்டு தான் இருக்கிறது. இதைத் தடுக்க, பலமுறை சட்டம் (Manual Scavengers Deaths Prevention Act) கொண்டு வந்தாலும், பல இயந்திரம் கண்டுபிடித்தாலும் இந்த நடைமுறையால் பல மரணங்கள் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இந்த சட்டம், எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது? மலக்குழி மரணங்கள் எத்தனை? உள்ளிட்டப் பல்வேறு தலைப்பின்கீழ், டாக்டர் கல்யாணி தலைமையில் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் ஆய்வுமேற்கொண்டது. இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.

கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்வது, கால்வாயில் அடைப்பை சரி செய்வது என மனிதர்கள் பாதுகாப்பாற்ற முறையில் இந்த பணிகளை செய்து வருகின்றனர். இதைத் தடுப்பதற்குத் தான் 'கையால் மலம் அள்ளும் தொழிலுக்கு தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் 2013' கொண்டுவரப்பட்டது. ஆனால், மனித மலத்தை மனிதன் சுத்தம் செய்யும் பணி, பல இடங்களில் தற்போதும் நடைமுறையில் உள்ளது. இதனால், உயிர் இழப்புகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 12 நபர்கள் மலக்குழி மரணங்கள் அடைந்துள்ளனர்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஜனவரி மாதம் தாம்பரத்தில் இரண்டு பேரும், ஏப்ரல் மாதம் மதுரையில் மூன்று பேரும், மே மாதம் ஆவடி மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு நபரும், ஜூன் மாதம் சென்னையைச் சுற்றிய பகுதிகளில் நான்கு நபரும் என 12 நபர்கள் உயிரிழந்தனர்.

இது ஒருபக்கம் இருக்க, இந்தியாவில் கடந்த 1993 முதல் 2022 வரை 989 நபர்கள் மலக்குழித்தொட்டி மற்றும் பாதாள சாக்கடை பணியின்போது இறந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக நபர்கள் தமிழ்நாட்டில்தான் இறந்துள்ளனர். 29ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 218 நபர்கள் இறந்துள்ளனர். தமிழ்நாட்டிற்குப் பிறகு, குஜராத் மாநிலத்தில் 153 நபர்களும், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 107 நபர்களும் இறந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 2016 முதல் 2020 வரையிலான கணக்கீட்டின் படி,

  • சென்னை - 12,
  • திருவள்ளுர் - 10,
  • விருதுநகர் - 3,
  • காஞ்சிபுரம் - 6,
  • தர்மபுரி - 3,
  • நாகப்பட்டினம் - 2,
  • தூத்துக்குடி - 4,
  • கோவை - 3,
  • கடலூர் - 3,
  • மதுரை - 1,
  • திருச்சி - 1,
  • விழுப்புரம் - 2,
  • திருப்பூர் - 4,
  • தஞ்சாவூர் - 1 என மொத்தமாக 55 நபர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

இந்த மரணங்கள் நடப்பதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. அதில் முக்கிய காரணம், உரிய பாதுகாப்பு இல்லாமல் பணி செய்வது. கிட்டத்தட்ட 58 வகையான பாதுகாப்பு கருவிகள் பணியின்போது, பயன்படுத்த வேண்டும். ஆனால், இவைகள் ஏதும் பயன்படுத்தாமல் அதற்கானப் பணியை மேற்கொள்ளும்போது, விஷவாயு தாக்கி இறக்கின்றனர். மேலும், இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதால் உடல் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. சில மாதங்கள் நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களை அரசு கணக்கு இடுவதில்லை.

அரசு சார்பில் பணி செய்யும்போது, இறந்தவர்களுக்கு மட்டுமே நிவாரண நிதி கிடைக்கிறது. தனியார் வீடுகளில், அடுக்குமாடி குடியிருப்பில்கூட இதுபோன்ற மரணங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், தனியாரிடம் விருப்பப்பட்டு இந்த வேலை செய்தார்கள் என்று கூறிவிட்டு; அரசுக்கு இதில் பொறுப்பில்லை என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், இத்தகைய மரணங்களால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் புகார் அளித்தாலும், போலீசாருக்கு வழக்குப் பதிவதிலும் சரி இழப்பீடு வழங்குவதிலும் சரி பெரும் சிக்கல்கள் உள்ளன.

இது தொடர்பாக, இந்த ஆய்வறிக்கையை தயார் செய்த டாக்டர் கல்யாணி நம்மிடம் பேசிய போது," 'கையால் மலம் அள்ளும் தொழிலுக்கு தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் 2013'-ன் (Prohibition and Rehabilitation of Manual Stool Scavenging Act 2013) படி இந்த தொழில் ஒரு குற்றம் ஆகும். இது அனைத்து இடங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டோம். ஆனால், இந்த தொழில் இன்னும் ஒழிக்கப்படாமல் உள்ளது.

பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் என்ற போர்வையில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பட்டியலின மக்கள் வறுமையை இந்த தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 21 வழக்குப்பதிவு இது தொடர்பாக பதியப்பட்டுள்ளது. இதில் 9 நபர்களுக்கு மட்டுமே நிவாரண நிதி கிடைத்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். ஏதாவது பேசினால், இருக்கின்ற பணியும் இல்லாமல் போய்விடுமோ? என்ற பயத்தில் எங்கள் இடம் பேசத் தயங்கினார்கள். மனித மலத்தை மனிதனே அள்ளுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி இத்தொழிலை முற்றிலும் ஒழிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இந்த தொழிலை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சமீபத்தில் ரோகினி, சிரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான படம் விட்னஸ் (Witness 2022). இப்படத்தில் தூய்மைப் பணியாளர்களின் துயரமான உலகத்தை மிகவும் யதார்த்தத்துடன் தத்ரூபமான முறையில் நடிகை ரோகிணி நடித்திருப்பார். இப்படத்தில் பெரும் நகரங்களில் நாகரிக வளர்ச்சிக்காக அடித்தட்டு மக்கள் எவ்வாறு உளவியல் ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் அணுகி வருவதை காட்டியிருப்பார்கள்.

கண்ணுக்குப் புலப்படாத வகையில் நமது நாட்டிலுள்ள இதுவரை கண்டிராத உண்மைகளையும் அவைகளை தீர்மானிக்கின்ற காரணிகளாக உள்ளவற்றையும் திறம்பட இப்படத்தில் காட்சிப்படுத்திருப்பார், அதன் இயக்குநர் தீபக். நமது மாநிலத்தில் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளையும் திட்டங்களையும் வகுத்து செயல்படுத்தி வரும் அரசு, அவைகளை இத்தகைய விளிம்புநிலை மக்களிடம் இருந்து தொடங்கி, அவர்களுக்கான மாற்று வாழ்வாதாரத்தையும் அமைத்து தந்தால் போதுமானதே என்பது சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: மலக்குழி மரணங்களுக்கு முடிவு எப்போது? வேதனையில் வாடும் தொழிலாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.