ETV Bharat / state

Bakrid Festival: 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு

author img

By

Published : Jun 27, 2023, 10:07 PM IST

Etv Bharat
Etv Bharat

இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழ்நாடெங்கும் 800 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னை: இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் (Bakrid festival). இப்பண்டிகை மூலம் தியாகத்தை சிறப்பிப்பதுடன் நம்மிடம் உள்ளவற்றை சமமாகப் பிறருக்கும் கொடுத்து உண்ண வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துவதே இப்பண்டிகையின் மாண்பாக உள்ளது. இத்தகைய பக்ரீத் ஈகை பெருநாளில், இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி எல்லாம் வல்ல இறைவனை தொழுவதுண்டு. அதன் பிறகு ஆடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை உணவாக சமைத்து அவற்றை இல்லாதவர்களுக்கும் தங்களின் நண்பர்கள், உறவினர்கள் எனப் பலருக்கும் வழங்குவதுண்டு. இவ்வாறு நாடெங்கும் உள்ள இஸ்லாமிய மக்கள் பண்டிகையை தன் உறவினர்களுடன் இணைந்து சிறப்பித்து மகிழ்வது வழக்கம்.

ஜப்பான், மொராக்கா, மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், சவுதி உள்ளிட்ட நாடுகளில் இந்த பக்ரீத் பண்டிகை மிக சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு சவுதியில் மட்டும் ஜூன் 28ஆம் தேதியும், மற்ற நாடுகளில் ஜூன் 29ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் கொண்டாடப்படும் நிலையில், பயணிகள் சிரமமின்றி பயணிக்க பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Lal Salaam: திருவண்ணாமலையில் 'லால் சலாம்' படப்பிடிப்பு; ரஜினிகாந்த் பங்கேற்பு!

ஜூன் 29 அன்று பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக அறிக்கை ஒன்றை இன்று (ஜூன் 27) வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், 'ஜூன் 28 அன்று சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கு செல்ல 400 பேருந்துகள் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கு செல்ல 400 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்திக் கொண்டு தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருப்பூரில் களரி போட்டி: 23 பதக்கங்களை வென்ற கோவை ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.