ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயார் - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்

author img

By

Published : Jun 27, 2023, 3:48 PM IST

tamil-nadu-ready-for-2024-parliamentary-elections-cec-sathyapratha-sahoo-explains
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார் - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தகவல்

2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக, அனைத்து வாக்கு பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

சென்னை: 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று இருந்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த வருடம் மே மாதம் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் தயாராவதற்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும்; அதாவது இந்த ஆண்டு இறுதி டிசம்பர் அல்லது அடுத்தாண்டு ஜனவரியில் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் பணிகள், இந்தியா முழுவதும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் போன்ற பணிகளை இணையதளம் மூலமாக இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்து முழுமையான வாக்களார் பட்டியல் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வி-விபேட் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில், பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், எத்தனை வாக்குச்சாவடிகள், எவ்வளவு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு போன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு உள்ளன.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ''வரும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 30 சதவீதம் கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்களும் தயார் நிலையில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 68,036 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. ஒரு வாக்குச் சாவடியில் 1,500 வாக்காளர்கள் வாக்காளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவைகள், மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. 2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு மாவட்ட வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் போன்றவற்றை மதிப்பிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவைக்கு அதிகமாக 35% கூடுதல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும். தற்போது வரை 1,78,357 வாக்குப்பதிவு இயந்திரம் 1,02,581 கன்ட்ரோல் யூனிட் 1,08,732 விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்து இருந்தால் அடுத்த 3 மாதத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். ஜூலை 4ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையில் வாக்குப் பதிவு இயந்திங்கள் ஆய்வு செய்யப்படும்'' எனக் கூறினார்.

இதையும் படிங்க: Gut Health: இந்த உணவு வகைகளை தவறியும் சாப்பிடாதீங்க - குடல் ஆரோக்கியம் அவ்வளவுதான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.