ETV Bharat / state

உலக கவனத்தை ஈர்க்கும் தமிழகம்.. பன்னாட்டு விளையாட்டு மையமாக மாறுவதால் மக்களிடையே பெருகும் ஆர்வம்!

author img

By

Published : Aug 13, 2023, 8:09 PM IST

Tamil Nadu is becoming a hub for sports as international sports series are held in Tamil Nadu
உலக கவனத்தை ஈர்க்கும் தமிழகம்

ஒடிசாவைப் போல் தற்போது தமிழகத்திலும் தொடர்ச்சியாக சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்தப்படுவதால் தமிழகம் தற்போது சர்வதேச விளையாட்டு தொடர்களுக்கான கேந்திரமாக மாறி உள்ளது. அதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பு...

சென்னை: கடந்த 20 நாட்களாகவே, சென்னையின் மேல், ஆசிய கண்டம் முழுவதும் தன் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாடு அரங்கத்தில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி தொடர் ஆகஸ்ட்-3 ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட்-12-ஆம் தேதி முடிவடைந்தது.

இதில், இந்திய அணி 2023ஆம் ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை பெற்றது. ஆடவர் ஹாக்கி சாம்பியன் கோப்பைத் தொடர்கள், ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போன்ற பெரிய தொடர்கள் 1996, 2005, 2006- ஆகிய ஆண்டுகளில் நடைபெற்று உள்ளன. அதன் பிறகு, சென்னையில் சர்வதேச ஹாக்கி தொடர் நடைபெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போலவே ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டித் தொடரை நடத்தும் வாய்ப்பையும் மிகுந்த போட்டிக்கு இடையில் தான் தமிழ்நாடு அரசு வென்றெடுத்து இருக்கிறது. ஒடிசாவில் ஹாக்கி உலகக் கோப்பை நடைபெற்ற நிலையில், இந்த போட்டியையும் அங்கேயே நடத்துவதற்கான திட்டம் இருந்தது.

தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒடிசாவுக்குச் சென்று ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு, ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு ஆகியோரை சந்தித்து, தமிழகத்துக்கு, இந்த வாய்பை பெற்றது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயாமக இருந்து வருகிறது.

மேலும், பிரிட்ஷ் காலத்திற்கு பிறகு, இந்தியா நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றது போல், கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சி இமயம் அடைந்து இருக்கிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்று தான் கூற முடியும். இந்தியாவில், கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கும் ரசிகர்கள் , மற்ற விளையாட்டுகளில் இல்லை என்று தான் வேதனையுடன் கூற முடியும்.

விளையாட்டுத் துறையை வளர்க்கும் நோக்கில் சர்வதேச அளவிலான வசதிகளை அரசுகள் செய்து தருவதன் மூலம் மற்ற விளையாட்டுகளை புத்துயிர் பெற வைத்திருக்கிறது தமிழக அரசு. மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது, தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் செஸ் போட்டியானது மாணவர்களுக்கு வைக்கபட்டது.

அதேப்போல், ஹாக்கிக்கும் சில மாணவர்கள் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெறும், ஒவ்வொறு சர்வேதச விளையாட்டின் போதும், மாணவர்கள் அதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும், பள்ளிகளிலே அவர்களின் திறமை கண்டறிய இது ஒரு வாய்ப்பாக தமிழக அரசு, குறிப்பாக விளையாட்டு மேம்பாட்டு துறை செய்து வருகிறன.

இந்தியாவில், எப்படி ஒவ்வொறு மாநிலத்திற்கும் தனி தனி மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவை தனித்து இருப்பது போல், விளையாட்டுகளிலும், ஒவ்வொறு மாநில மக்களும் தனி தனி விளையாட்டுகள் மூலம் தனிச் சிறப்பாக திகழ்ந்து வருகிறார்கள்.

வடகிழக்கில் வாடமால் இருக்கும் கால்பந்து: இந்தியாவில், எப்போதும், தனித்துவம் கொண்டும், பின்தங்கிய மாநிலங்களாகக் கருதப்படும் வடகிழக்கு மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம் மற்றும் திரிபுரா, இந்தியாவின் மக்கள் தொகையில் 3.8% தான் இருக்கின்றனர்.

ஆனால் இவர்கள் இந்திய விளையாட்டுத் துறையில் முக்கிய பங்காற்றுகின்றனர். இந்தியாவில் கால்பந்து உயிர்ப்போடு இருப்பது வடகிழக்கு பகுதிகளில் என்று தான் கூற முடியும். ஜிம்னாஸ்டிக்ஸ், குத்து சண்டை போன்ற விளையாட்டுகளிலும் இங்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

சர்வதேச அளவில் சிறந்த வீரர்களாக பைசுங் பூட்டியா, சுனில் சேத்ரி ஆகியோரை சிக்கிம் உருவாக்கியது. கால்பந்து வீராங்கனை ஒயினம் பெம்பெம் தேவி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரை மணிப்பூரும், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகரை திரிபுராவும் உருவாக்கின. மணிப்பூர், மேகாலயம், சிக்கிம், மிசோரம் ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் கால்பந்து விளையாட்டிற்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றன.

ஒடிஷா: சென்ற, 10 ஆண்டுகளில் மட்டும் இரண்டு உலக கோப்பை ஹாக்கி தொடர்கள், ஆறு சர்வதேசத் தொடர்கள் ஒடிசாவில் நடைபெற்றுள்ளன. அதேபோல் இந்திய அணியில், இம்மாநிலத்தில் இருந்து 4 முதல் 5 வரை ஹாக்கி வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். மேலும் ஒடிசா அரசு ஹாக்கி விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியானா: மல்யுத்தம், குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளில் ஹரியாணா தனி கவனம் செலுத்தி வருகிறது. ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற ஏழு மல்யுத்த ஒலிம்பிக் பதக்கங்களில், ஐந்து பதக்கங்கள் ஹரியாணாவிலிருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த மாநில கிராமப்புறப் பகுதிகளில் மல்யுத்தம் எப்போதும் ஓர் அங்கமாக திகழ்ந்து வருகிறது.

மேலும், ஹரியாணாவில் 34 இடங்களில் விளையாட்டு மையங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் 46 பயிற்சி மையங்கள், கிராமங்களில் 232 மினி மைதானங்கள் என விளையாட்டுக்காக இம்மாநிலம் தனிக்கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

தமிழகம் ஓர் பன்னாட்டு விளையாட்டு மையம்: சர்வதேச விளையாட்டுகளில் தமிழ்நாடு தொடர்ந்து தனி கவனம் செலுத்தி வருகிறது. மேலும், ஆகஸ்ட் 12 உடன் முடிந்த சர்வதேச ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டியின் தாக்கம் முடிவடைவதற்குள் மீண்டும் ஒரு, சர்வதேச போட்டி நாளை (ஆகஸ்ட்-14) தொடங்க உள்ளது.

உலக சர்ஃபிங் லீக் (அலைச்சறுக்கு) தகுதி சுற்றுக்கான 3 ஆயிரம் புள்ளிகளை கொண்ட சர்வதேச அலைச்சறுக்கு ஓபன் நடைபெறுகிறது. இந்த போட்டியில் 12 முதல் 14 நாடுகளைச் சேர்ந்த 80 முதல் 100 வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இந்தியா மற்றும் தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கத்தின் தலைவர் அருண் வாசு அண்மையில் தெரிவித்து இருந்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட், உலக கோப்பை ஸ்குவாஷ், சென்னை ஓபன் டென்னிஸ், ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டித் தொடர் வரிசையில், உலக சர்ஃபிங் லீக் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, தமிழகம் ஒரு சர்வேதச விளையாட்டு மையமாக இருந்து வருகிறது. இதனால் உலகின் பார்வை தற்போது தமிழகம் மேல் திரும்பி உள்ளது.

கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தில் இருந்து 12 பேர் பங்கேற்றனர். இதில் தடகளத்தில் பங்கேற்றவர்கள் 5 பேர். அவர்கள் கிராமப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய கதையும் வலி மிகுந்தது. அவர்கள் கடந்து வந்த பாதையும், அதில், முயற்சியும், திறமையும், மூச்சுகாற்றாக இருந்தது. அவர்களுக்கு தமிழக அரசு, பல்வேறு வழிகளில் உதவியது.

மேலும், சில கிராமப் புறங்களில், உலக விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வு தேவை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும், சட்டப்பேரவையில், அறிவித்தது போல், ‘தொகுதிக்கு ஒரு சிறிய விளையாட்டு அரங்கு’ என்னும் அறிவிப்புக்கும் விரைவில் வடிவம் கொடுத்து, தமிழகத்தில் இருக்கும் மாணவர்கள், இளைஞர்களிடைய இருக்கும் திறமையை கண்டறிந்தால், தமிழகம் கல்வி மட்டுமின்றி விளையாட்டிலும் தலைச் சிறந்ததாக திகழும் எனபதில் ஐயம் இல்லை.

சர்வதேசப் போட்டிகளை சென்னை மற்றும் அதன் புறநகரில் மட்டும் நடத்தமால், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் நடத்தினால், அனைவருக்கும் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

இதையும் படிங்க: ஜெய்ஸ்வால், கில் அதிரடி.. இந்திய அணி அபார வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.