ETV Bharat / sports

ஜெய்ஸ்வால், கில் அதிரடி.. இந்திய அணி அபார வெற்றி!

author img

By

Published : Aug 13, 2023, 9:33 AM IST

india vs west indies 4th t20
india vs west indies 4th t20

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

புளோரிடா: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 4வது டி20 போட்டி நேற்று (ஆகஸ்ட் 12) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கைல் மேயர்ஸ் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோர் களம் இறங்கினர். கைல் மேயர்ஸ் 17 ரன்களிலும், பிராண்டன் கிங் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் வந்த ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் அக்சரிடம் கேச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்ததாக களம் கண்ட பூரான் மற்றும் கேப்டன் ரோவ்மேன் பவல் ஆகியோர் தலா 1 ரன்கள் எடுத்து வெளியேறினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹெட்மியர் களமிறங்கினார். அவர் அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை கிடுகிடுவென உயர்த்தினார். அவர் 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உள்பட 61 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்து வீச்சு தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், அக்ஸர், முகேஷ் குமார், சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் யாஜஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். இருவரும் தங்களது அரை சதத்தை பதிவு செய்தனர்.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் 165 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை பறி கொடுத்தனர். ஷுப்மன் கில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 17 ஒவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 84 ரன்களுடனும், திலக் வர்மா 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன் மூலம் 2-2 என இந்திய அணி சமம் செய்து உள்ளது. இரு அணிகளும் மோதும் ஐந்து மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஆகஸ்ட் 13) இரவு 8 மணிக்கு அதே மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: ஆசிய ஹாக்கி இறுதிப்போட்டி: 4வது முறையாக சாம்பியனான இந்திய அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.