ETV Bharat / state

கண்ணாடி துகள், மாஞ்சா நைலான் நூலுக்கு தமிழக அரசு தடை; மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 9:24 PM IST

மாஞ்சா நைலான் நூலுக்கு தடை
மாஞ்சா நைலான் நூலுக்கு தடை

Tamil Nadu Govt Ban Manja thread: மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் கண்ணாடி துகள், மாஞ்சா நைலான் நூலுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கண்ணாடி துகள், மாஞ்சா நைலான் நூலுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து அறிவித்துள்ளது. இத்தடை உத்தரவினை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986, (ஒன்றிய சட்டம் 29, 1986) விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”2023ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதியில் வெளியிடப்பட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி தமிழ்நாடு அரசிதழில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

காற்றாடி பறக்கவிடும் போட்டிகளின் போது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மற்றும் குறிப்பாக பறவைகளுக்கும் பலத்த காயங்கள் ஏற்படுவதற்கும், சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் பிளாஸ்டிக் பூசப்பட்ட மாஞ்சா நூலே காரணம் என்று தமிழ்நாடு அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் பூசப்பட்ட மாஞ்சா நூல்கள் வடிகால் பாதைகள் மற்றும் நிர்நிலைகளை அடைப்பதன் மூலம் கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இது பறவைகள் மற்றும் பிற விலங்கினங்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.

மக்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு நைலான், பிளாஸ்டிக், மற்றும் பிற செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட மாஞ்சா, காற்றாடி நூல் தயாரித்தல், விற்பனை செய்தல் சேமித்தல், இறக்குமதி செய்தல் மற்றும் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை வனசரகர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மேற்படி அறிவிப்பை செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவினை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூல் (பாதுகாப்பு) சட்டம், 1986, (ஒன்றிய சட்டம் 29, 1986) விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகளின் பாதத்தை பாதுகாக்க மருத்துவக் கல்லூரியில் புதிய பிரிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.